அசாமில் கடுமையான வெள்ள பாதிப்பு.. 6.53 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு
சிவசாகர், சரைடியோ, தேமாஜி, திப்ருகர், கோலாகாட், ஹோஜாய், ஜோர்ஹாட், கம்ரூப், கம்ரூப் மெட்ரோபாலிட்டன், கார்பி அங்லாங் மற்றும் நாகாவோன் ஆகிய 11 மாவட்டங்களில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 23, 2026: அசாமில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அசாம் தலைமைச் செயலாளர் ரவி கோட்டா உத்தரவிட்டுள்ளார். அசாமில் நிலவும் வெள்ள நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் ரவி கோட்டா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அசாமில் கடுமையான வெள்ள பாதிப்பு:
இதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சரைடியோ, சிவசாகர், ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் உள்ளிட்ட மாவட்டங்களின் நிலவரம் மற்றும் பல்வேறு துறைகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அடுத்த நான்கு நாட்களுக்கு மாநிலத்தில் கூடுதல் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, நிவாரணப் பணிகளில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், நிவாரண முகாம்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழப்பு:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களைக் குறைக்க பல்வேறு துறைகளுக்கு இடையே நெருங்கிய ஒருங்கிணைப்பும், விரைவான நடவடிக்கையும் அவசியம் என ரவி கோட்டா வலியுறுத்தினார். மேலும், அத்தியாவசிய சேவைகளை விரைவாக மீட்டெடுக்க தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் தங்களது உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க: தேர்வுத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு
இதனிடையே, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 24 மணி நேரத்தில் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
6.53 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு:
சிவசாகர், சரைடியோ, தேமாஜி, திப்ருகர், கோலாகாட், ஹோஜாய், ஜோர்ஹாட், கம்ரூப், கம்ரூப் மெட்ரோபாலிட்டன், கார்பி அங்லாங் மற்றும் நாகாவோன் ஆகிய 11 மாவட்டங்களில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தினசரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!
அடுத்த நான்கு நாட்களுக்கு ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வெள்ளம் தொடர்ந்து நீடித்து வருவதால், சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவும், நிவாரணப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் அசாம் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.