நாடாளுமன்றத்தில் பரபரப்பு.. நேருக்கு நேர் நின்று முழக்கமிட்ட ஆளும் – எதிர்க்கட்சி எம்பிக்கள்!!
Delhi Parliament protest NDA vs Opposition: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்திய வேளையில், ஆளும் கூட்டணி எம்பிக்களும் எதிரெதிரே நின்று போட்டாபோட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
டெல்லி, ஜூலை 23: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களும், INDIA கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்களும் எதிரெதிரே நின்று போட்டாபோட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பும் அசாதாரண சூழலும் நிலவியது. நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாக இந்த மோதல் போக்கு வெடித்துள்ளது.
மேலும் படிக்க: தேர்வுத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை:
வழக்கமாகக் காலை 11 மணிக்கு அவை கூடுவதற்கு முன்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஏதேனும் ஒரு முக்கிய விவகாரம் குறித்து போராட்டம் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி, இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் திரண்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
டெல்லியிலும் நாடு முழுவதும் வீதியில் இறங்கிப் போராடி வரும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தித் தீவிர முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் குதித்த ஆளும் NDA கூட்டணி:
எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய அதே நேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த ஆளும் கட்சி எம்பிக்களும் பதிலுக்குப் போராட்டத்தில் குதித்தனர். மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் அரசியல் ஆக்குகின்றன என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராட்டங்களைத் தூண்டிவிடுகிறார் என்றும் குற்றம்சாட்டிப் பதில் முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்திலேயே இரண்டு தரப்பு எம்பிக்களும் நேருக்கு நேர் நின்று போட்டாபோட்டியாக முழக்கமிட்டது பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
பிரதமர் மோடியின் அறிவிப்பு:
இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பதிவில், “வினாத்தாள் கசிவு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகத் தண்டனை வாங்கித் தரும் வகையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் முற்றிலுமாக நிராகரித்துள்ளன. இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது உண்மையான தீர்வாகாது! இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்து வரும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதே இதற்கான ஒரே தீர்வு. பிரதமர் மோடியின் தவறான கொள்கைகளால்தான் இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் காட்டமாகச் சாடியுள்ளார்.
மேலும் படிக்க: அமைச்சர்கள் ஜனநாயகன் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருவது வெட்கக்கேடானது – டிடிவி தினகரன் காட்டம்..
ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் வலுப்பெற்றுள்ளதன் காரணமாகவே பிரதமர் இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிட முன்வந்துள்ளார் என்றும், ஆனால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை இந்த போராட்டம் ஓயாது என்றும் எதிர்க்கட்சிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளன.