அமைச்சர்கள் ஜனநாயகன் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருவது வெட்கக்கேடானது – டிடிவி தினகரன் காட்டம்..
குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உள்ளிட்ட அனைத்து வகையான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தையும் உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை 22, 2026: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்து மகிழ ஆர்வம் காட்டுவது வெட்கக்கேடானது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் இறந்த நிலையில் கோழிக்குஞ்சு இருந்ததாக வெளியான செய்தி தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அனைவரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்து மகிழ ஆர்வம் காட்டி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனநாயகன் படம் பார்க்க ஆர்வம் காட்டும் அமைச்சரகள்:
மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 22, 2026
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனைப் புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படப் பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக்கேடானது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு ஒன்று இறந்து, அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
அங்கன்வாடி மையத்தில் அழுகிய முட்டை:
பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் முட்டை வழங்கப்பட்டிருப்பது, குழந்தைகளின் உடல்நலனையும் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
முட்டையின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்:
மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்து மகிழ ஆர்வம் காட்டுவதும், அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக்கேடானதாகும்.
எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உள்ளிட்ட அனைத்து வகையான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தையும் உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”