முதல்வர் பதவியில் விஜய் உறுதியாக அமருவார்…புஸ்ஸி ஆனந்த்!
Vijay Will Definitely Take Over CM: 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று கட்சியின் தலைவர் விஜய் முதல்வர் பதவியில் உறுதியாக அமருவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார் .
புதுச்சேரி மாநிலம், உப்பளம் துறை முகம் வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று பேசியதாவது: நாம் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் குடும்பமாகவே உள்ளோம். தளபதியின் வார்த்தைக்கு கட்டுப்படக்கூடிய குடும்பம் என்று சொன்னால் அது நாம் தான். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோகமாக வெற்றி பெற்று முதல்வர் பதவியில் தலைவர் விஜய் அமருவார். இதேபோல, புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும்.
புதுச்சேரி காவல் துறைக்கு மிகுந்த நன்றி
தலைவர் விஜய்யின் மீது உள்ள அன்பு மற்றும் பாசத்தின் காரணமாகவே காலை 5 மணி முதல் அனைவரும் உப்பளம் மைதானத்தில் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள். காவல்துறை விதித்த 31 கட்டுப்பாடுகளையும் மதித்து இங்கு கூடி இருக்கின்ற அனைத்து தொண்டர்களுக்கும், இவ்வளவு பாதுகாப்பு வழங்கிய புதுச்சேரி காவல் துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் சம்பவத்துக்கு பிறகு, சுமார் 72 நாட்கள் கழித்து புதுச்சேரியில் பொதுக் கூட்டத்துக்காக தலைவர் விஜய் வந்துள்ளார்.
மேலும் படிக்க: புதுச்சேரி அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்…தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு!




2026-இல் முதல்வராக விஜய் பொறுப்பேற்பார்
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் எதையும் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் ஒரு நபர் தன்னை உயர்த்திய மக்களுக்காக அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய ஒரே தலைவர் விஜய் மட்டுமே. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பொறுப்பேற்பார்.
தமிழகம்-புதுச்சேரியில் தவெக ஆட்சி அமையும்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நம் கட்சியின் வெற்றிக்காக அனைவரும் ஒன்று பட்டு உழைத்தால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. புதுச்சேரியில் இப்படி ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றால், அவர்களுக்கு எல்லாம் கொடுத்து அழைத்தால் மட்டுமே இப்படி ஒரு கூட்டத்தை கூட்ட முடியும்.
விஜய்யின் முகத்துக்காக கூடும் கூட்டம்
ஆனால், புதுச்சேரிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிறார் என்று கூறினால் மட்டும் போது, அவரது முகத்துக்காக இவ்வளவு கூட்டம் எதையும் எதிர்பார்க்காமல் கூடும். அது நமது தளபதியின் குடும்பம் மட்டுமே என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஸ்டாலின் சார் தில்லு இருந்தால் தேர்தலில் மோதி பாருங்கள்…ஆதவ் அர்ஜூனா அட்டாக்!