முதல்வர் விஜய் வீட்டின் அருகே புதிய தலைமை செயலகம்? கடலின் அழகை ரசிக்க ஏற்பாடு.. அதிகாரிகள் தீவிர ஆய்வு!
TN Government New Secretariat : தமிழக அரசின் புதிய தலைமை செயலகம் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வீட்டின் அருகே கட்டப்பட உள்ளதாகவும், இதற்காக அரசு என்ஜினீயர்கள் முதல் கட்ட ஆய்வை முடித்து விட்டதாகவும் பொதுப்பணித்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலகம் சென்னை மாவட்டத்தில் செயின்ட் சார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. என்ற தலைமை செயலகத்தில் முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இட பற்றாக்குறை இருப்பதன் காரணமாக புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணியில் தமிழக வெற்றிக் கழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தற்போது முதல் அமைச்சர் அறை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10- ஆவது மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைமை செயலகத்தையும் வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதற்காக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் வீட்டின் அருகே புதிய தலைமைச் செயலகம் அமைக்க முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக அதிகாரிகளும் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் விஜய் வீட்டின் அருகே புதிய தலைமை செயலகம்
இதில், பட்டினப்பாக்கத்தில் உள்ள சுமார் 17 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இடத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஒரு வீடு அமைந்துள்ளது. குறிப்பாக கடலின் அழகை ரசிப்பதற்காகவே கோட்டையில் இருந்து முதல்வரின் அறை நாமக்கல் கவிஞர் அரங்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது, கடலுக்கு மிக மிக அருகே பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டினால் அருமையாக இருக்கும் என்று முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
மேலும் படிக்க: அரச்சனா கல்பாத்தி அகோரத்துக்கு அரசு பதவி.. முதல்வர் விஜய் கொடுத்த முக்கிய பொறுப்பு.. என்ன அது!




தலைமை செயலகம் கட்ட பொறியாளர்கள் ஆய்வு
எனவே, அந்த இடத்தில் அரசு பொறியாளர்கள் முதல் கட்ட ஆய்வை நடத்தி முடித்துள்ளனர். 2-ஆம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த இடம் சரியானது என தெரிய வந்தால் அங்கே புதிய தலைமை செயலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மறைந்த முன்னாள் முதல்வர்களான மு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி காலத்தில் பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே உள்ள அரசு இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட திட்டமிட்டனர்.
சுனாமி- புயலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு
ஆனால், கடலுக்கு அருகே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் நேரிடும்போது பெரிய பாதிப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க: தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு.. களமிறங்கும் 65 சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!