டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு?
Senthil Balaji Anticipatory Bail Dismissed: டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஜூலை 30: டாஸ்மாக் நிர்வாகத்தில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் தொடர்புடைய 41 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் படிக்க: குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் வெட்டிப் படுகொலை.. நடுநடுங்க வைக்கும் கொடூரம்!!
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் எஃப்.ஐ.ஆரும்:
சோதனையின் முடிவில் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக்கூடும் என்பதால், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. “முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான வலுவான ஆதாரங்களும் இல்லை.
டாஸ்மாக் அதிகாரிகள் செய்த தவறுகளுக்கு செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொதுப்படையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி முன்ஜாமீன் வழங்கக் கோரப்பட்டது.
காவல்துறை தரப்பு எதிர்ப்பு வாதம்:
டாஸ்மாக் காலி பாட்டில்கள் சேகரிப்பு, டெண்டர் ஒதுக்கீடு மற்றும் மதுபானக் கொள்முதல் ஆகியவற்றில் ரூ.100 கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் 10-க்கும் மேற்பட்டோருக்குத் தொடர்பு உள்ளது. தற்போது புலன் விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. மனுதாரர் மிகுந்த செல்வாக்கு மிக்கவர் என்பதால், இந்த நிலையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் கலைக்கப்பட்டு விசாரணை முற்றிலும் பாதிக்கப்படும். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது” என அரசு வழக்கறிஞர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிருப்தியில் ஓ பன்னீர்செல்வம்.. திமுகவிலிருந்து விலகி த.வெ.கவில் இணைய திட்டமா?
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி:
அரசுக்கு நிதி இழப்பீடு ஏற்பட்டுள்ளதற்கும், அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதற்கும் முதற்கட்ட ஆதாரங்கள் உள்ளன. புலன் விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், மனுதாரரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற காவல்துறையின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனக் கூறி செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால், இவ்வழக்கில் செந்தில் பாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.