Tamil Nadu Weather forecast: நாளை முதல் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?
Tamil Nadu weather today : தமிழக கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகவும், இதன் காரணமாக ஆகஸ்ட் 28, 2026 நாளை முதல் 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 27 : தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகவும், இதன் காரணமாக ஆகஸ்ட் 28, 2026 நாளை முதல் ஆகஸ்ட் 30, 2026 ஞாயிற்றுக்கிழமை வரை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாளை முதல் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின் படி, தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 27, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு.. 133 இந்தியர்களின் நிலை என்ன?




மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் டெல்டா மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28, 2026 நாளை முதல் ஆகஸ்ட் 30, 2026 ஞாயிற்றுக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைபெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சென்னையின் 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, 15 மண்டலங்களுக்கும் 7 அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து நீர்வளத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்களுக்கு ரூ. 42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை.. இல்லையென்றால் வலுவான போராட்டம்.. ஆட்டோ – டாக்சி சங்கம் அறிவிப்பு!
இந்த நிதியில், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு, வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் துார்வாரும் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன. மொத்தமாக 202 இடங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதில் பெருநகர சென்னை பகுதியில் 76 பணிகள் ரூ. 22.7 கோடியிலும், மற்ற பகுதிகளில் 126 பணிகள் ரூ.19.30 கோடியிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. முன்னதாக சூப்பர் எல் நினோ தாக்கத்தை எதிர்க்கொள்ள ரூ. 340 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது.