மாணவர்களின் புத்தகப்பை சுமை இனி குறைக்கப்படும்.. இந்த நொடி முதல் கல்வி முறை மாறுகிறது – அமைச்சர் ராஜ் மோகன்..
புத்தகச் சுமை எந்த அளவுக்குக் குறைகிறதோ, அந்த அளவுக்கு மாணவர்களின் மனச்சுமையும் குறையும். நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவான சுமையைத்தான் எடுத்துச் சென்றிருப்பார். ஆனால், அதைவிட பள்ளி மாணவர்கள் தற்போது அதிகமான சுமையைச் சுமந்து செல்கின்றனர் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 21, 2026: தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் சுமக்கும் புத்தகப் பையின் சுமை இனி குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை கொரட்டூரில் பள்ளிப் பாடத்திட்ட மாற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “நான் படிக்கும் காலத்தில் கணிதம் சரியாக வராததால் அதிகமாக அடி வாங்கியிருக்கிறேன். இனி கடினமான கணிதப் பாடங்கள் கதைகளின் வழியே கற்றுத்தரப்படும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த STEAM கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படும்.
கல்வி முறை மாற்றி அமைக்கப்படும்:
குழந்தைகளை மையப்படுத்திய கல்வியாக தமிழ்நாட்டின் கல்வி முறை மாற்றி அமைக்கப்படும். இது அனைவருக்குமான கல்வியாக இருக்கும். கதைகளின் வழியே கணிதத்தைக் கற்பிக்கும் வகையில் வரும் காலங்களில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
மேலும் படிக்க: ரூ.2 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு கை நீட்டிய வயர்மேன்.. கம்பி எண்ண வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.. தென்காசியில் அதிரடி நடவடிக்கை!
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகியவற்றை ஒருங்கிணைத்த புதிய கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள கல்வி முறைகளை ஆய்வு செய்து வருமாறு அறிவுறுத்தியிருந்தார். அங்கு STEM கல்வி முறை நடைமுறையில் உள்ளது. STEM என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
STEAM கல்விமுறை என்றால் என்ன்?
தமிழ்நாட்டில் இதனை மேலும் ஒரு படி உயர்த்தி, STEAM கல்வி முறையாக நடைமுறைப்படுத்த உள்ளோம். இதில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்துடன் கலைப் பாடமும் இணைக்கப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் பள்ளிகளில் கற்றுத்தரப்படும்.
மேலும் படிக்க: கெஞ்சியும் விடாத கந்துவட்டிக்காரர்.. மதுரையில் பெண் எடுத்த விபரீத முடிவு.. உறவினர்கள் மறியல்!
இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி முறை மாறுகிறது. கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றவும், மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பாடப்புத்தகங்கள் வண்ணப்படங்களுடன் கூடிய புத்தகங்களாக மாற்றப்படும்.
புத்தகச் சுமை குறைக்கப்படும்:
புத்தகச் சுமை எந்த அளவுக்குக் குறைகிறதோ, அந்த அளவுக்கு மாணவர்களின் மனச்சுமையும் குறையும். நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவான சுமையைத்தான் எடுத்துச் சென்றிருப்பார். ஆனால், அதைவிட பள்ளி மாணவர்கள் தற்போது அதிகமான சுமையைச் சுமந்து செல்கின்றனர்.
காலம் மாறிவிட்டது. உணவுப் பழக்கவழக்கம், நடை, உடை, பாவனை என அனைத்தும் மாறிவிட்டன. அதேபோல், இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி முறையும் மாறும். மாணவர்களின் மனச்சுமையைக் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இனி புத்தகங்கள் பாடங்கள் நிறைந்ததாக மட்டுமல்லாமல், கற்றலை இனிமையாக்கும் வகையிலும் இருக்கும். புத்தகச் சுமை குறையும்போது மாணவர்களின் மனச்சுமையும் குறையும்” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.