Nainar Nagendran: தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்.. கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சு!
Tamil Nadu Assembly Elections 2026: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியே 2026-ல் முதலமைச்சராவார் எனக் கூறியுள்ளார்.

திருவாரூர், ஜூன் 14: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை (2025 Tamil Nadu Assembly) எதிர்கொள்ளும் வகையில் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK), பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. முன்னதாக, அதிமுக எப்போதும் இனி பாகவுடன் கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் கூட்டணிக்கு என்னதான் அதிமுக தலைமை தாங்கினாலும், பாஜகவே அதிமுகவை வழிநடத்துகிறது என்று தெரிவித்தனர். தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 2026ல் கூட்டணி ஆட்சி அல்ல, அது பாஜகவின் ஆட்சி என்று தெரிவித்தார். இந்தநிலையில், தற்போதைய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran), தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன்:
வருகின்ற 2025 ஜூன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று அதாவது 2025 ஜூன் 14ம் தேதி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொண்டர்கள் முன்னிலையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், மதுரையில் பாஜக முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எவ்வளவு தடங்கல்களை ஏற்படுத்த முடியுமோ, அவ்வளவு தடங்கல்களை கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு வைத்துதான் திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் செய்து வருகிறது.




திமுகவின் இந்த விஷயங்கள்தான் அன்றைய காலத்தில் எடுபட்டது. தற்போது இவை எதுவும் எடுபடவில்லை. கீழடியை பொறுத்தவரை, ஏற்கனவே அதற்கான சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் சில சான்றுகளும் தேவைப்படுகிறது. தமிழுக்கு தொண்டு செய்வதுபோல் திமுக காட்டிக்கொண்டு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர பார்க்கிறார்கள். வருகின்ற 2026 தேர்தலில் இவை எதுவும் எடுபடாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால், யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பது தேர்தல் முடிந்த பின்னரே தெரியவரும்.
திருவாரூர் ஆலோசனைக் கூட்டம்:
In Tiruvarur, over 200 BJP members conducted a two-wheeler rally without police permission to welcome new state president Nainar Nagendran, despite prior permission being denied. pic.twitter.com/YMOydfUJCz
— Ranipet Newsit (@Newsit_Ranipet) June 14, 2025
திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டுமென்றால், அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலில் நிற்க வேண்டும். எங்களுடைய கூட்டணியில் தேமுதிக கண்டிப்பாக வரவேண்டும் அப்போதுதான், திமுகவை தோற்கடிக்க முடியும் என நான் கூறியுள்ளேன். அதேநேரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி கட்சி ஆட்சி அமையுமா அல்லது தனிக்கட்சி ஆட்சி அமையுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “கூட்டணிக்கட்சிகளின் ஆட்சி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்” என்று தெரிவித்தார்.