டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திட்டவட்டம்..
ADMK - BJP Alliance: தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி என்றும் டெல்லிக்கு மோடி என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நிச்சயம் தமிழகத்தில் மலரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் (National Democratic Alliance) அதிமுக இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் டெல்லிக்கு தலைமை மோடி என்றும் தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடி பழனிச்சாமி என மத்திய பாஜக தலைமை தெள்ளத் தெளிவாக அறிவித்திருக்கிறதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். பாஜகவும் அதிமுகவும் கூட்டணியில் இருந்தாலும் தொடர்ந்து இரு கட்சியினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது நிலவி வருவது நிதர்சனம். சமீபத்தில் மதுரைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும், நிச்சயமாக இம்முறை பாஜக ஆட்சி மலரும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு எடப்பாடி – டெல்லிக்கு மோடி:
ஆனால் அதிமுக தரப்பில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தான் அமையும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துகள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் டெல்லிக்கு தலைமை மோடி என்றும் தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் எனவும் பாஜக மத்திய தலைமை தெள்ளத்தெளிவாக அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசுவதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி மலரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் இணைந்த அதிமுக பாஜக:
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மீண்டும் பாஜக- அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. #AIADMK #BJP #2026assemblyelection pic.twitter.com/QVBRH3JmR2
— TV9 Tamil (@TV9Tamil) April 11, 2025
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தது ஆனால் அந்த தேர்தலில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இருப்பினும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தமிழகத்தில் நான்கு இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. ஆனால் அதன் பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவினருக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளின் காரணமாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளி ஏறியது.
பின்னர் மீண்டும் ஏப்ரல் 11 2025 அன்று மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு அதிமுகவினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறை மதிய உள்துறை அமைச்சர் மதுரைக்கு வந்த பொழுது இந்த கருத்தினை உறுதியாக தெரிவித்தார் இது போன்ற சூழலில் தற்போது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.