காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள்…திமுக மூத்த நிர்வாகிகள் போர்கொடி?மாறும் கூட்டணி கணக்கு!
DMK - Congress Seat Sharing: காங்கிரஸ் கட்சி கேட்கும் கூடுதல் தொகுதிகளை கொடுத்தால் அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தான் ஆபத்து என்று அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால், திமுகவின் கூட்டணி கணக்கும் மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, 41 சட்டமன்ற தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினர் சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக தலைமையிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கேட்கும் கூடுதல் தொகுதிகளை கொடுக்கக் கூடாது என்று திமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை 41 தொகுதிகள் அளித்திருந்தது. ஆனால், அந்த தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.
காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் அளித்தால் திமுகவுக்கு பாதிப்பு
இதனால், அந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாமல் போனது. எனவே, வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கேட்கும் கூடுதல் தொகுதிகளை அளித்தால், அது திமுகவுக்கே பாதிப்பு என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் திமுக தலைமையிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. டிஜிட்டல் பிரச்சாரம் குறித்து முக்கிய ஆலோசனை..
காங்கிரஸுக்கு பிடி கொடுக்காமல் நழுவும் திமுக
இதனால் தான், தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருந்த நிலையிலும், திமுக அதற்கு பிடி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் திமுக மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக திருவனந்தபுரம் வரை சென்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், திமுக கூட்டணியில் தேமுதிக இணையலாம் என்று கூறப்படுகிறது.
தள்ளிப் போகும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வருகை
இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில், திமுகவில் தற்போது வரை அந்த குழு அமைக்கப்படவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபாலின் தமிழக வருகையும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. இதனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி ஏற்படும் என்றும், இறுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கணக்கு மாறுபட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.
மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் 2-ஆவது முறையாக முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது…அமைச்சர் பி.கே.சேகர்பாபு



