முருகன் பாடல் சர்ச்சை – விஜய் மீது இந்து முன்னணி போலீஸில் புகார் – என்ன நடந்தது?
Murugan Song Controversy : தவெக 3 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன் மருதமலை மாமணியே முருகய்யா பாடலை விஜய்யின் பெயரை வைத்து மாற்றி பாடினார். இதனையடுத்து விஜய் மீது இந்து முன்னணி காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
சென்னை, பிப்ரவரி 3 : தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) 3 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், முருகனின் பக்திப் பாடலை வரிகளை மாற்றி பாடப்பட்டதாகவும் அது இந்துக்களின் புண்பட்டுள்ளதாகவும் கூறி இந்து முன்னணி சார்பில் தவெக தலைவருமான விஜய் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 3, 2026 அன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றியதுடன், தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், நிகழ்ச்சியில் பிரபல பாடகர் வேல்முருகன் பாடிய பாடல்களுக்கு விஜய் உற்சாகமாக நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
முருகன் பக்திப் பாடல் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு
இந்த நிகழ்ச்சியில், பக்தர்களிடையே மிகவும் பிரபலமான முருகன் பக்திப் பாடலான மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலின் வரிகளை மாற்றி பாடப்பட்டதாகவும், அதில் அரசியல் சார்ந்த சொற்கள் சேர்க்கப்பட்டதாகவும் இந்து முன்னணி சார்பில் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாடல்வரிகளை மாற்றி வருவாய் எங்கள் தளபதியே, வருவாய் வெற்றிக்கழமே என்ற வரிகளுடன் பாடப்பட்டதாக கூறப்படுகிறது. இது முருக பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை”.. அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!!




இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையருக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், தமிழ் கடவுள் முருகன் பக்திப் பாடலை மாற்றி பாடுவது, பக்தர்களை அவமதிப்பதாகும். மேலும் இது மத மோதலைத் தூண்டும் அபாயம் கொண்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில், அது பக்தர்களை கேலி செய்யும் சூழலை உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : அதிகாலையில் வாட்டி வதைக்கும் குளிர்.. மழையும் இருக்கு!.. வானிலை அப்டேட் இதோ..
இந்த வீடியோவை பார்க்கும்போது எங்கள் மன வேதனை ஏற்பட்டது. இதற்காக பாடகர் வேல்முருகன், நடிகர் விஜய் உள்ளிட்டோரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் அறங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம், மத உணர்வுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தும் நிலையில், மற்றொரு புறம் அரசியல் நிகழ்ச்சிகளில் பாடல் மாற்றி பாடுவது வழக்கமான ஒன்று என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகார் தொடர்பாக காவல் துறை தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், புகார் பதிவு செய்யப்பட்டு, விஜய்யிடம் சட்டப்படி விசாரணை நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.