நீலகிரியில் 24 மணி நேரத்தில் 300 மி.மீ மழைக்கு வாய்ப்பு.. பிரதீப் ஜான் சொன்ன ஷாக் ரிப்போர்ட்..
Weather Update: நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மி.மீ அளவு மழை பதிவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழை (South West Monsoon) தொடங்கியது முதலே தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் ஜூன் 14 2025 ஆன இன்று நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் (Red Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .அதேபோல் கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) எச்சரிக்கையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஜூன் 15 2025 தேதியான நாளை நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீப் ஜான் சொல்வது என்ன?
ஜூன் 14 2025 முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு நீலகிரி மற்றும் வால்பாறையில் அதி கன மழை இருக்கும் எனவும் கன்னியாகுமரி மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் கன மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் கேரளா, காவிரி படுக்கை, கர்நாடகா கடலோர பகுதிகள் தென்மேற்கு பகுதிகளில் கன மழை இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் அவலாஞ்சி, பார்சன் வேலி முக்கூறுத்தி அணை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் சுமார் 200 முதல் 300 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பொறுத்தவரை மேற்கு திசை காற்றின் காரணமாக அம்பத்தூர், அண்ணா நகர், பெரம்பூர், மணலி ஆகிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளார். இப்பகுதிகளில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை சுமார் 150 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் தென் சென்னை ஆன மீனம்பாக்கம் பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை கூட பதிவாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அவலாஞ்சியில் 7 சென்டிமீட்டர் மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. ஜூன் 14 2025 முதல் ஜூன் 16 2025 வரை தென் தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 18ஆம் தேதி வரை கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மீதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டாலும் பிற்பகல் மற்றும் மாலை பொழுதில் காற்றின் வேறுபாடு காரணமாக ஆங்காங்கே நல்ல மழை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.