மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே தவெகவின் சாதனை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
தவெக அரசின் 100 நாள் சாதனை குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “100 நாள் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை. அதற்கான அறிவிப்புகளும் வெளியாகவில்லை. தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே இந்த 100 நாள் ஆட்சியின் சாதனை” எனக் குறிப்பிட்டு விமர்சித்தார்.
ஆகஸ்ட் 17, 2026: தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, தமிழக வெற்றிக் கழக அரசு சார்பில் பல்வேறு பதிவுகள் மற்றும் நூல் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 100 நாள் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை என விமர்சித்துள்ளார்.
த.வெ.க அரசின் 100 நாள்:
தமிழ்நாடு முதலமைச்சராக சி. ஜோசப் விஜய், மே 10ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாட்டில் இதுவரை திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து வந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் திமுக இரண்டாவது இடத்துக்கும், அதிமுக மூன்றாவது இடத்துக்கும் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் “100 நாள் ஆட்சி – ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.. அமைச்சர் அருண்ராஜ்
100 நாளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்:
அதில், தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசிய கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது முதல், அரசு நிகழ்ச்சிகளில் அவர் பேசியது வரையிலான பல்வேறு காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதல்வர் விஜய் அறிவிப்பு..
மேலும், தமிழக அரசின் திட்டங்களான 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் திட்டம், சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியுடன் கூடிய நவீன பிரம்மாண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே சாதனை:
இந்தச் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “100 நாள் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை. அதற்கான அறிவிப்புகளும் வெளியாகவில்லை. தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே இந்த 100 நாள் ஆட்சியின் சாதனை” எனக் குறிப்பிட்டு விமர்சித்தார்.