முதல்வர் விஜய் துறையில் முறைகேடு புகார்.. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை.. அதிர்ச்சி பின்னணி!
Tender Irregularities CM Vijay Department : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ. 45.90 லட்சம் டெண்டர் முறைகேடு புகாரை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது.
தமிழக வெற்றி கழக ஆட்சியில் முதல்வர் ஜோசப் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாக துறையில் தாம்பரம் மாநகராட்சியில் வெளியிடப்பட்ட ரூ. 45.90 லட்சம் மதிப்பிலான இரு டெண்டர்களில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் ஐ.ஏ.எஸ். அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை, ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் பணிகள் முடிவடைந்த பின்னர் டெண்டர் வெளியிடப்பட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றுக்கு புகார் அளித்திருந்தது.
டெண்டர் வெளியிடுவதற்கு முன்னதாகவே பணிகள் முடிப்பு
அந்த புகாரில், ரூ. 45.60 லட்சம் மதிப்பிலான டெண்டரில் முறைகேடு இருப்பதாகவும், இதில் தொடர்புடைய மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. டெண்டர் சட்ட விதிகளை மீறியதுடன், டெண்டர் கோரப்படுவதற்கு முன்னதாகவே கூட்டு சதி செய்யப்பட்டு பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ளதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக டென்டர்கள் வழங்குவதற்காக ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பணிகள் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திண்டுக்கல்லில் மகளை கேலி செய்ததால் ஆத்திரம்.. இளைஞரை கொன்று உடல் தண்ணீர் தொட்டியில் வீச்சு.. தந்தை உள்பட மூவர் கைது!




மாநகராட்சி ஆணையர் – அமைச்சருக்கு தொடர்பு
இதில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதுடன், இதனை, திறப்பு விழா நடத்தியுள்ளனர். இந்த சட்ட விரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு பண பட்டுவாடா செய்யவும் தாம்பரம் ஆணையர் கண்துடைப்புக்காக போலீஸ் டெண்டர்களை வெளியிட்டுள்ளார் என்று அறப்போர் இயக்கம் பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
எந்த டெண்டரில் முறைகேடு நிகழ்ந்தது
அசோக தூண் அமைத்தல் மற்றும் அழகுப்படுத்தும் பணிகளுக்காக ரூ. 27.30 லட்சம் மதிப்பிலான டெண்டர் வெளியிடுவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனை அமைச்சர் சரத்குமார் திறந்து வைத்துள்ளார். இதே போல, சிட்லபாக்கத்தில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ.18.60 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு, அதன் பின்னரே டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு டெண்டர்களில் முறைகேடு இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போம் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்… தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்.. வேட்பாளர்கள் அறிவிப்பு!