எஸ்ஐஆர் படிவம் சமர்பிக்க இன்று கடைசி நாள் – பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
SIR Form Deadline: எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளின் போது வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவடிங்களை சமர்பிப்பதற்காக வழங்கப்பட்ட அவகாசம் டிசம்பர் 11, 2025 அன்றுடன் முடிவடைகிறது. பெயர் விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து புதிதாக தங்களை இணைத்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை, டிசம்பர் 11 : இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் (SIR) எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் கடந்த நவம்பர் 4, 2025 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 4, 2025 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் தித்வா (Ditwah) புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்ததால் பணிகள் மேற்கொள்வதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு டிசம்பர் 11, 2025 அன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.
எஸ்ஐஆர் படிவம் சமர்பிக்க இன்றே கடைசி நாள்
எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளின் போது வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவடிங்களை சமர்பிப்பதற்காக வழங்கப்பட்ட அவகாசம் டிசம்பர் 11, 2025 அன்றுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 10, 2025 புதன் கிழமை வரை 6,40,10,380 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில், 6,40,83,414 படிவங்கள் வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்டு சமர்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெயர் இடம் பெயர்ந்தவர்கள் முகவரி மாறியவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளவர்கள், உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு படிவங்கள் வழங்கப்படவில்லை.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்? நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? வெளியான அறிவிப்பு
பெயர் விடுபட்டவர்கள் எப்படி விண்ணப்பிப்பது?
இந்த நிலையில் வருகிற டிசம்பர் 16, 2025 அன்று இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இந்த பட்டியலில் 70க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பெயர் விடுபட்டவர்கள் டிசம்பர் 16, 2025 முதல் ஜனவரி 15, 2025 வரை ஆவணங்களை சமர்பித்து புதிதாக தங்களை இணைத்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 18 வயது பூர்த்தி அடைபவர்கள் படிவம் 6, வெளிநாட்டில் வசிப்பவர்கள் படிவம் 6ஏ, தங்கள் பெயர் சேர்க்க மற்றும் நீக்குவதற்கான ஆட்சேபனைகளை தெரிவிப்போர் படிவம் 7, முகரி மாறியவர்கள் படிவம் 8 ஆகியவற்றை பெற்று பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.
இதையும் படிக்க : “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” திமுகவின் புதிய பிரசார பயணம் தொடக்கம்!
நாம் சமர்பிக்கும் படிவங்கள் தேர்தல் அதிகாரிகளால் சமர்பிக்கப்ப்டடு, பிப்ரவரி 14, 2025 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு சாவடி என வாக்கு சாவடிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதியாக புதிதாக 6,648 வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்ட நிலையில் மேலும் 80 வாக்குசாவடிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் மொத்த வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 75,035 ஆக உயர்ந்துள்ளது.



