நீதிபதி மீது அரிவாள் வீச்சு.. நூலிழையில் உயிர் தப்பினார்.. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பரபரப்பு!
Srivilliputhur Family Welfare Court: ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மீது நபர் அரிவாளாள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரிவாள் வீச்சில் நீதிபதி மயிரிலையில் உயிர் தப்பினார். அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், செங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 2025- ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று திங்கள்கிழமை ( பிப்ரவரி 16) நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதி சுதாகர் விசாரணை நடத்தினார். அப்போது, பாலமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பை சேர்ந்தவர்களிடம் குடும்ப பிரச்சினை தொடர்பாக இருவரது தரப்பு நியாயங்களை கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, இந்த வழக்கில் நீதிபதி சுதாகர் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி, இந்த விவகாரத்தில் பாலமுருகனுக்கு எதிராகவும், அவரது மனைவிக்கு ஆதரவாகவும் நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.
நீதிபதியை நோக்கி அரிவாள் வீச்சு
அப்போது, தீர்ப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், தான் மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து நீதிபதியை நோக்கி வீசினார். அப்போது, பறந்து சென்ற வீச்சறிவால் நீதிபதியின் முன்பகுதியில் உள்ள மேஜையின் மீது பட்டு கீழே விழுந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத நீதிபதி சுதாகர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, நீதிமன்றத்தில் இருந்து பாலமுருகன் தப்பி ஓட முயற்சித்தார். உடனே, வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சத்தமிட்டவாறு பாலமுருகனை பிடிக்க முயன்றனர்.
மேலும் படிக்க: காலையிலேயே பயங்கரம்..25 மீனவர்கள் கைது…இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!




பாலமுருகனை சுற்றி வளைத்த பிடித்த போலீசார்
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உஷாராகி அவசரமாக நீதிமன்றத்துக்குள் சென்று பாலமுருகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை அளிக்கும் நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேள்விக்குறியான நீதிமன்ற பாதுகாப்பு
தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் மீது வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. தற்போது, பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கக்கூடிய இடமாகவும், பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய இடமாகவும் இருக்கக்கூடிய நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் வகையில் மாற்றி உள்ளது.
காங்கிரஸ் கட்சி கண்டனம்
இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரான அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாகும். தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால் பாலமுருகன் செய்த செயல் சட்டத்தையும், நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: காதல் திருமணம்.. முதிய தம்பதியின் உருக்கமான முடிவு.. சென்னையில் சோகம்..