Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்…சுற்றி பார்க்க கட்டணம் நிர்ணயம்…எவ்வளவு தெரியுமா!

Keeladi Open Air Museum Fees: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்ப்பதற்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலும், இந்த அருங்காட்சியகம் எப்போது செயல்படும், எப்போது விடுமுறை என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரம் இதோ!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்…சுற்றி பார்க்க கட்டணம் நிர்ணயம்…எவ்வளவு தெரியுமா!
கீழடி திறந்தவெளி அருங்காட்சிய பார்வை கட்டணம் அறிவிப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 16 Feb 2026 08:02 AM IST

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்புவனம் பகுதியில் உள்ள யூனியன் கீழடியில் சுமார் 10 கட்டங்களாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வு பணியில் 2, 4, 6 மற்றும் 7-ம் கட்ட அகழாய்வுப் பகுதிகளில் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அதற்காக கீழடியில் ரூ.24.30 கோடியில் 4.5 ஏக்கரில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக தினம்தோறும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர்,

கீழடி திறந்தெவெளி அருங்காட்சிகத்தை பார்வையிட கட்டணம்

இந்த நிலையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இதில், பெரியவர்களுக்கு ரூ.20, 5 முதல் 12 வயது வரை உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ரூ.10, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5, வெளிநாடுகளை சேர்ந்த முதியோர்களுக்கு ரூ.50 மற்றும் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ரூ.25, கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தை புகைப்படம் எடுப்பதற்கு ரூ.30 மற்றும் வீடியோ பதிவு செய்வதற்கு ரூ.100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா?

அருங்காட்சியகத்தை எப்போது பார்வையிடலாம்

இந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தை திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும் பார்வையிடலாம் எனவும், வாரத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள்

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் தமிழர்களின் பழங்கால நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பானை ஓடுகளில் தமிழி எழுத்துக்கள், தமிழர்களின் நாகரிக அடையாளங்களான சுடுமண் குழாய்கள், உறை கிணறுகள், இரு புறமும் கல் படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு மற்றும் செங்கல் கட்டுமானங்கள். செப்பால் ஆன புலிச் சின்னம், மற்றும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் ஆகிய அரிதான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கீழடி அருங்காட்சியகத்தில் 2 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இங்கிருந்த அகழாய்வு தளங்கள் கண்ணாடி தளமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

“கீழடி நம் தாய் மடி” செல்பி பாயிண்ட்

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திறந்தவெளி அருங்காட்சியகம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதுவும் கீழடியில் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் முன் அலங்கார தோரண வாயில் மற்றும் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொள்ளும் வகையில் ” கீழடி நம் தாய்மடி என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தென்னை மரத்தில் செய்யப்பட்ட செல்ஃபி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை இருக்குமா? தொடரும் பனிமூட்டம்..