தாயின் கள்ளக்காதலால் உருக்குலைந்த குடும்பம்.. பலியான மகள்கள்.. உயிருக்கு போராடும் தந்தை..
இதனிடையே, பிரதீப் பேசியதை கேட்டு பதறிப்போன உறவினர், இதுகுறித்து சென்னையில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களை உடனடியாக பிரதீப் இருந்த மாமல்லபுரம் விடுதிக்கு சென்று தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, பிரதீப் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற உறவினர்கள், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சென்னை, பிப்ரவரி 15: சென்னை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பெயிண்டர் ரசாயனம் கொடுத்து 2 மகள்களை கொன்று விட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்கொலை செய்வதற்கு முன்பு உறவினர் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ காலில் பேசி அழுதுள்ளார். அப்போது அவர் எங்கு இருக்கிறோம் என்ற விவரத்தை கூறவே, சக உறவினர்கள் மூலம் அவரது இருப்பிடத்தை தேடி, போலீசாரின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரத்தை இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க: பகலில் IT வேலை, சொகுசு வாழ்க்கை.. இரவில் வீடு வீடாக திருட்டு.. போலீசாருக்கு தண்ணி காட்டிய பலே கில்லாடி!!
மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு:
சென்னை கொளத்தூர் அடுத்த பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 35), பெயிண்டர். இவரது மனைவி பிரீத்தி (28), இவர்களுடைய மகள்கள் லியா (7), சுபிக்ஷா (4). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பிரீத்திக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரதீப் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதுகுறித்து மனைவி, கள்ளக்காதலன் மீது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புழல் போலீசிலும் புகார் செய்தார்.
மனைவியின் நடத்தையால் மனமுடைந்த பிரதீப்:
இந்த நிலையில் அவர் தன்னுடைய 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். மனைவியின் நடத்தையால் மனமுடைந்த பிரதீப், தனது மகள்கள் லியா, சுபிக்ஷாவுடன் நேற்று முன்தினம் மாலை மாமல்லபுரம் சென்றார். அங்கு ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று தனது அறையில் இருந்தவாறே பிரதீப் சென்னையில் உள்ள தனது உறவினருக்கு, மனமுடைந்து அழுதுகொண்டே வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, தான் தன்னுடைய மகள்களுடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறி இணைப்பை துண்டித்தார்.
தின்னர் கொடுத்து மகள்கள் கொலை:
இதைத்தொடர்ந்து, தான் கொண்டு வந்த ரசாயனத்தை (பெயிண்ட்டுக்கு கலக்கும் தின்னர்) 2 மகள்களுக்கும் பிரட்டில் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்தார். இதனிடையே, பிரதீப் பேசியதை கேட்டு பதறிப்போன உறவினர், இதுகுறித்து சென்னையில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களை உடனடியாக பிரதீப் இருந்த மாமல்லபுரம் விடுதிக்கு சென்று தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, பிரதீப் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற உறவினர்கள், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: குடும்பத்தையே சீர்குலைத்த புற்றுநோய்.. மனைவி மீதான அதீத பாசத்தால் விபரீத முடிவு.. தந்தை, மகன் பலி!!
உயிருக்கு போராடிய பிரதீப்:
அப்போது, அந்த அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, பிரதீப்பின் மகள்கள் லியா, சுபிக்ஷா இருவரும் விடுதி அறையில் கட்டிலில் இறந்து கிடந்தனர். உயிருக்கு போராடிய நிலையில் பிரதீப் இருந்தார். தொடர்ந்து, அவரை மீட்ட மாமல்லபுரம் போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அதேசமயம், உயிரிழந்த சிறுமிகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியின் கள்ளக்காதலால் ஒரு குடும்பமே பேரழிவை சந்தித்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)