Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காலையிலேயே பயங்கரம்..25 மீனவர்கள் கைது…இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

Fishermen Arrested: இலங்கை எல்லைப் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களின் 2 படகுகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இவர்கள் காங்கேசன் முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலையிலேயே பயங்கரம்..25 மீனவர்கள் கைது…இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!
25 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 16 Feb 2026 08:37 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கமாகும். அவ்வாறு, கடலுக்கு செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அவர்களது மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை சேதப்படுத்துவதும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் செல்வதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 25 மீனவர்கள் மின்வளத்துறையிடம் முறையான அனுமதி பெற்று கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக தங்களது படகுகளில் சென்றனர். அவர்கள் காரைநகர் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை சுற்றி வளைத்தனர்.

25 மீனவர்கள் கைது- 2 படகுகள் பறிமுதல்

இதன் பின்னர், தமிழக மீனவர்கள் 25 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களது 2 படகுகளுடன் காங்கேயம் துறைமுகத்துக்கு அழைத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மீனவர்களிடம் காங்கேசன் முகாமில் கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து சென்று சிறை வைத்திருந்தனர்.

மேலும் படிக்க: “திமுக – காங்., கூட்டணி நீடிக்காது.. புகையத் தொடங்கிவிட்டது”.. இபிஎஸ் பரபர பேச்சு

9 மீனவர்கள் விடுவிப்பு- 3 மீனவர்களுக்கு கடுங்காவல்

அவர்களில், 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், 3 மீனவர்களுக்கு 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் 11.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் சிறை வைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த 3 மீனவர்களையும், ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 9 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் உள்ள நடைமுறை தாமதம் காரணமாக அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி

எனவே, இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்து உடனடியாக தமிழக மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த மேலும் 25 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளது. இந்த நிகழ்வானது, மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொடர்ந்து அதிகரித்து வரும் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.. மக்களை கவரும் அறிவுப்புகள் வெளியாக வாய்ப்பு..