தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.. மக்களை கவரும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..
TN govt interim budget 2026: தமிழக அரசின் அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்வது வழக்கமாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் தனித்தனியாக தாக்கல் செய்து வருகிறது.
சென்னை, பிப்ரவரி 16: தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மேற்கொண்டு வருகிறார். நடப்பாண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன்படி, மக்களை கவரும் வகையில், இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, தேர்தல் காரணமாக மகளிர் உரிமைத் தொகை ஒரே சமயத்தில் ரூ.5,000ஆக வரவு வைக்கப்பட்டது. அதோடு, திமுக மீண்டும் ஆட்சியை தொடரும்போது ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புதிய கட்சி தொடங்கும் சசிகலா?.. பிப்.24ல் வெளியாகும் அறிவிப்பு?.. அதிர்ச்சியில் அதிமுகவினர்!!
நாளை தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்:
இந்த சூழலில் தான் நாளைய தினம் இடைக்கால பட்ஜெட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை (பிப்.17) தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் பிப்.20ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்வது வழக்கமாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் தனித்தனியாக தாக்கல் செய்து வருகிறது. தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தாக்கல்செய்ய முடியும். பின்னர், ஆட்சி அமைக்கும் கட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
சபாநாயகர் அப்பாவு கொடுத்த தகவல்:
இதுதொடர்பாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, வரும் 17ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக சட்டமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அடுத்த கூட்டத்தொடர் கூடுகிறது. அன்றைய தினம் 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். பிப்ரவரி 20ஆம் தேதி வரும் நிதியாண்டிற்கான முன்பண மானிய கோரிக்கை, 2025-26ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவீனங்களுக்கான மானியக் கோரிக்கை ஆகியவை வாசித்து அளிக்கப்படும். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என அலுவல் ஆய்வு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா?
பிப்.23ல் அமைச்சரவை கூட்டம்:
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்களைக் கவரும் வகையிலும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும் வகையில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.