இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள்…தங்கம் தென்னரசு தகவல்!
Tamil Nadu Interim Budget: தமிழக மக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விமர்சனம் செய்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தமிழக அரசு தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் பொது மக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் இடம் பெறும் என்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக சார்பில் நடைபெறும் தென் மண்டல இளைஞரணி சந்திப்பில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10 வருவாய் மாவட்டங்கள், 20 கழக மாவட்டங்கள், இவற்றில் இருக்கக்கூடிய 58 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஒன்றிய, பகுதி, நகர கழக, பேரூர் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பங்கேற்கும் வகையில் மாவட்ட கழக செயலாளர்கள், அமைச்சர்கள், இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர் முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டுள்ளது.
துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி
மேலும், இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான முன் அனுமதி சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதில், வாகன நிறுத்துமிடம், உணவு வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விளக்குகள், தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, மருத்துவத்துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, காவல்துறை உள்ளிட்டோர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வட தமிழகத்தை மையப்படுத்தி திருவண்ணாமலையில் அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் திமுக மண்டல மாநாடு நடைபெற்றிருந்தது.
மேலும் படிக்க: அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு?.. நயினார் நாகேந்திரன் விளாசல்!




இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் தேர்தல் அறிவிப்பு
இதைத் தொடர்ந்து, கொங்கு மண்டலத்தில் திமுக சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற மாநாடு நடத்தப்பட்டிருந்தது. தற்போது, தென் மண்டலத்தில் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, நடைபெறக்கூடிய எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கும் முக்கியத்துவம் இருக்கும். இந்த நிகழ்வில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்பார் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் இந்த மாநாட்டில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன.
பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வருகிற 10-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளது. திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். தமிழக மக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். தி மு க வின் தேர்தல் அறிவிப்புகளை காப்பி செய்து அ தி மு க தனது வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களை மட்டும் இன்றி அறிவிக்கப்படாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: மயிலாப்பூர் தொகுதிக்கு குறி…திமுக-அதிமுக கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி!