“125 நாட்கள் வேலை திட்டத்தை சீர்குலைப்பதா?”.. திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..
AIADMK hold protests: மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதுடன், பணியாளர்களுக்கு நன்மை வழங்கும் வகையில் பல மாறுதல்களை செய்துள்ளன. இந்தச் சட்டம் மாநில அரசிற்கு வெளிப்படையாகவே கீழ்க்கண்ட அதிகாரத்தை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, பிப்ரவரி 06: தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பிப்ரவரி 13ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிபவர்கள் கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் ஆவார்கள். இந்த ஊதியத்தை நம்பியே கிராமப்புற ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டதுடன், குறித்த நேரத்தில் பணியாளர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டது என்று அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் படிக்க: பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு…தமிழக அரசு விடுத்த முக்கிய எச்சரிக்கை!
40 நாட்கள்கூட வேலை வழங்கவில்லை:
2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது 100 நாள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும்; பணியாளர்களின் சம்பளம் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும்; 100 நாள் வேலைத் திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, இதுவரை இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கடந்த 57 மாத கால திமுக ஆட்சியில், ஆண்டுக்கு சராசரியாக 40 நாட்கள்கூட வேலை வழங்கப்படவில்லை என்றும்; பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும், ஏழை, எளிய மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் திட்டத்தில் திமுக-வினர் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன.
125 நாட்களாக உயர்த்திய மத்திய அரசு:
கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்… pic.twitter.com/nao09Bepkq
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) February 5, 2026
இந்நிலையில், மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதுடன், பணியாளர்களுக்கு நன்மை வழங்கும் வகையில் பல மாறுதல்களை செய்துள்ளன. இந்தச் சட்டம் மாநில அரசிற்கு வெளிப்படையாகவே கீழ்க்கண்ட அதிகாரத்தை வழங்குகிறது. அவற்றில், பணியாளர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒருசில முக்கியமான நன்மைகள்: மாநில அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை. வேலையின் தன்மை மற்றும் பணியாளர் திறனை, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் பணிகளை அடையாளம் கண்டு ஒப்புதல் வழங்கலாம்.
நடைமுறையில் உள்ள திட்டம் அடிப்படையே:
எந்தப் பணிகள் எடுக்கப்பட வேண்டும்; அவை எங்கு செயல்படுத்தப்பட வேண்டும்; எப்போது செயல்படுத்தப்பட வேண்டும். உச்ச வேளாண் பருவங்களில் இடை நிறுத்தங்களை அறிவிக்கலாம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டத்தின் அடிப்படையிலேயே, மாவட்டம், வட்டாரம் மற்றும் பஞ்சாயத்து அளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 15 நாட்களுக்குள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இப்புதிய சட்டத்தினால், தமிழ் நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள் பலன் பெறுகின்றன; பலவீனப்படுவதில்லை. இந்தச் சட்டம் அடிப்படை ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் குளங்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் சந்தைகள் போன்றவை அப்பகுதி மக்களுக்காக உருவாக்கப்படுகிறது.
125 நாட்கள் வேலை உறுதி திட்டத்திற்கு எதிராக திமுக:
இது மாநில அரசுக்குத்தான் சொந்தமே தவிர, மத்திய அரசுக்கு சொந்தமல்ல என்பதையும், முறையாக பணிகள் நடைபெறுவதற்கு, பல வரையறைகளையும் நிர்ணயித்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு திமுக-வினரின் முறைகேடுகளுக்கு இடையூறாக இருக்கிறது என்று கருதி, கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தையே சீர்குலைக்கும் பணியில் திமுக அரசு, மத்திய அரசின் புதிய 125 நாட்கள் வேலை உறுதித் திட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க: தமிழகம்-புதுச்சேரியில் பிரதமர் மோடி 2 நாள்கள் விசிட்..பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்கிறார்…குஷியில் பாஜகவினர்!
பிப்.13ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:
இவ்வாறு தங்களது சொந்த நலனுக்காக மத்திய அரசின் கிராமப்புற மக்களுக்கான 125 நாட்களாக உயர்த்தப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திடத்தை தங்கின் சொந்த நலனுக்காக சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டு, அப்பாவி ஏழை, எளிய மக்களின் நலனை கேள்விகுறியாக்கும் நிர்வாகத்தற்ற அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு வரும் 13ம் தேதி காலை 10 மணியளவில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.