பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு…தமிழக அரசு விடுத்த முக்கிய எச்சரிக்கை!
Bird Flu Outbreak Warning: சென்னையில் பறவை காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளதால் பொது மக்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதில், ப்ளு வகை காய்ச்சல் தொற்று தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாறு பகுதியில் திடீரென ஏராளமான காகங்கள் சாலையோரம் இறந்து கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் அந்த காகங்களை மீட்டு ஆய்வுக்காக போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சென்னையில் காகங்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் அதுவும் சென்னையில் பறவை காய்ச்சல் தொற்று பரவத் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பறவை காய்ச்சல் பரவல் தொடர்பாக பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், தற்போது சென்னையில் பரவியுள்ள பறவை காய்ச்சல் என்பது பறவைகள் மத்தியில் பரவக்கூடிய நோய் தொற்று ஆகும்.
பொது மக்களுக்கு பறவை காய்ச்சல் பரவு வாய்ப்பு
ஒரு பறவையிடம் இருந்து மற்றொரு பறவைக்கு பறவை காய்ச்சல் பரவுவதால் அந்தப் பறவை உயிரிழந்ததை அடுத்து பரிசோதனையின் அடிப்படையில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. இந்த நோயானது பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது மிக மிக அரிதானது. இருந்தாலும், பொதுமக்களுக்கு இருமல், காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி உள்ளிட்டவை இருந்தால் பறவை காய்ச்சலின் சில அறிகுறிகளில் ஒன்றாகும். பறவை காய்ச்சலானது பறவைகளிடம் இருந்து நேரடியாகவும், சுகாதார கேடு உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு பரவ அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: தேர்தல் வாக்குறுதியில் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க குவியும் மக்கள்..தமிழக மக்களின் பக்கா பிளான்!




இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி
எனவே, பொதுமக்களுக்கு ப்ளூ போன்ற அறிகுறிகள் (II) சளி, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏதேனும் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அதற்கான சிகிச்சைகளை பெற வேண்டும். பறவைகளை கையாளும் நபர்கள் அதிலும் குறிப்பாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பறவைகளை கையாளும் நபர்கள், உயிரிழந்த பறவைகளை கையாளும் நபர்கள் மற்றும் இறைச்சி கடைகளில் பணி புரியும் நபர்கள் தீவிர முன்னெச்சரிக்கையுடன் பணி புரிய வேண்டும்.
பொது மக்கள் உரிய சிகிச்சை பெற வேண்டும்
இதில், பொதுமக்கள் யாரேனுக்கும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற்கான உரிய சிகிச்சை பெற வேண்டும். தமிழகத்தின் எந்த பகுதிகளிலும் சந்தேகத்துக்கிடமான வகையில் பறவைகள் உயிரிழந்தால், அது தொடர்பாக கால்நடை மருத்துவத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
முட்டைகள்-இறைச்சிகள் உண்பதை தவிர்க்கவேண்டும்
வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியவுடன் கை மற்றும் கால்களை கழுவுதல் உள்பட தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். முற்றிலும் வேக வைக்கப்படாத மற்றும் சரியாக வேக வைக்கப்படாத முட்டை, இறைச்சி ஆகியவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காகம் இறந்து கிடந்த விவகாரம்…சென்னையில் பறவை காய்ச்சல் பரவல்..கால்நடைத்துறை எச்சரிக்கை!