மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காரைக்கால் வருகை…தேஜ கூட்டணி தொகுதி பங்கீட்டில் முக்கிய முடிவு!
Union Home Minister Amit Shah: மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வருகிற பிப்ரவரி 14- ஆம் தேதி புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்திரயத்துக்கு வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி, தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை தற்போது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய என். ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்வதாக உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் பிரதமர் பங்கேற்கும் வகையில் மிகப்பெரிய அரசு விழாவை நடத்துவதற்கு அம்மாநில தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, பல்வேறு வகையான மெகா திட்டங்களை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி வருகிற பிப்ரவரி 21- ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காரைக்கால் வருகை
இந்த நிலையில், பிரதமர் வருகைக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் பிப்ரவரி 14- ஆம் தேதி ( சனிக்கிழமை) காரைக்காலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு, பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்ற உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையின் போது, புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்படுவதுடன், தொகுதி பங்கீடும் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: புதுச்சேரியில் இருந்து மது கடத்தலுக்கு செக்..கலால் துறையின் பக்கா ஏற்பாடு..என்ன அது!




தேஜ கூட்டணியின் மெகா திட்டங்கள்
மேலும், பிரதமர் வருகைக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட வேண்டிய மெகா திட்டங்கள் மற்றும் தொடங்கி வைக்கப்படக்கூடிய திட்டங்கள் ஆகியவற்றை தேர்வு செய்யும் பணி உள்ளிட்டவை இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் என். ஆர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை அங்கம் வகித்து வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி
கடந்த சட்டமன்ற தேர்தலில் உருவான இந்த கூட்டணி தற்போதும் வருகின்ற சட்டமன்ற தேர்திலில் கூட்டணி தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 30 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்படவில்லை. இதனால், அந்த கட்சியினர் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. எனவே, பிரதமர் மோடியின் வருகைக்கு முன்பாக தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சு வார்த்தை இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு…முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..குஷியில் பெண்கள்!