“நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலுக்கு வந்ததும் வந்தது ஏன்?”.. முதல்வர் விஜய்க்கு சீமான் சரமாரி கேள்வி!!
நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் இடைத்தேர்தலை எதிர்கொள்ளக் கொலைவெறியுடன் காத்திருப்பதாகவும், நாம் தமிழர் கட்சி வெறும் அரசியல் கட்சியல்ல மாறாகத் தமிழ் தேசியப் படை என்றும் ஆவேசமாகப் பேசியுள்ளார். அதோடு, முதல்வர் விஜய்யின் தொகுதி தேர்வு மற்றும் பெயர் மாற்றங்கள் குறித்து காரசாரமாக விமர்சித்து ஆவேசமாகப் பேசியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 03: தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என கொலை வெறியோடு காத்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். விழாவுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போதைய ஆட்சி நிர்வாகம் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்துப் பல்வேறு அதிரடிக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!
நடிகனுக்கும் தலைவனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை:
மேடையில் தனது ஆவேசமான ஆதங்கத்தை வெளிப்படுத்திய சீமான், “தமிழைச் சரியாக உச்சரிக்கக்கூடத் தெரியாதவர்கள் கையில் நாட்டைக் கொடுத்துவிட்டு எங்களை நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டீர்கள்” என்று கூறினார். மேலும், “நடிகனுக்கும் தலைவனுக்கும் வித்தியாசம் தெரியாத தருதலைக் கூட்டம்” என்று வாக்காளர்களைச் சாடிய அவர், “சினிமாத்துறையில் ‘பிளாக் டிக்கெட்’ கள்ளச்சந்தையில் விற்ற அயோக்கியப் பயல்கள் எல்லாம் இன்று எங்களைத் திரள்நிதித் திருடர்கள் என்று கூறுகிறார்கள்” எனக் கடுமையாகச் சாடினார்.
2 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
தவெக சாதியையும் மதத்தையும் ஒழிக்கப்போவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான உருட்டு என்று தெரிவித்த சீமான், “தமிழ்நாட்டில் அத்தனை தொகுதிகள் இருக்கும்போது திருச்சி கிழக்கையும், பெரம்பூரையும் தேடிப் போய் ஏன் போட்டியிட்டீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். பெரம்பூரில் மதக் கணக்கீடும், திருச்சி கிழக்கில் சாதி மற்றும் மதக் கணக்கீடும் இருப்பதால் தான் அந்தத் தொகுதிகளைத் தேர்வு செய்தீர்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், சாதி-மத ஓட்டுக் கணக்கீடுகளைப் பார்த்துவிட்டுச் சாதியை ஒழித்துவிட்டதாகப் பேசுவது வேடிக்கையானது என்றும் சாடினார்.
நடிக்கும்போது வராத ‘ஜோசப்’:
தொடர்ந்து விஜய்யின் பெயர் மாற்றம் குறித்துப் பேசிய சீமான், “சினிமாவில் நடிக்கும்போது ‘ஜோசப் விஜய்’ என்று வராத பெயர், அரசியலுக்கு வந்த பிறகு ஏன் ‘ஜோசப் விஜய்’ என்று மாறுகிறது?” எனக் கேள்வி எழுப்பினார். முதல் படத்திலோ அல்லது ஆரம்பக்கால சினிமாப் பயணத்திலோ அறிமுகப்படுத்தாத ‘ஜோசப்’ என்ற பெயரை அரசியலுக்கு வந்தவுடன் பயன்படுத்துவதன் பின்னணியில், கிறிஸ்துவ வாக்குகளைச் சேகரிக்கும் அரசியல் கணக்கு மட்டுமே இருக்கிறது என்று சீமான் குற்றம் சாட்டினார்.
காஸ்டியூம் டிசைனர் குறித்து எள்ளல் விமர்சனம்:
முதல்வரின் கள ஆய்வுகள் குறித்து விமர்சித்த சீமான், “எல்லாவற்றையும் ஆய்வு செய்கிற முதல்வர் பள்ளிக்கரணை ஏரிக்குள்ள இறங்கி நடக்கலாமே! அந்த குப்பைமேட்டில் ஏறி நின்று பார்க்கலாமே! பட்டுவேட்டி, பட்டுச்சட்டை கட்டி ஒவ்வொரு நாளுக்கும் ஒரு உடை வைத்துள்ளார். அந்த காஸ்டியூம் டிசைனரைத் தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று நகைச்சுவையாகச் சாடினார்.
இதையும் படிக்க : கர்நாடகா கபினி அணையில் நீர் திறப்பு 25,000 கன அடியாக அதிகரிப்பு.. தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு!!
இடைத்தேர்தலுக்காக காத்திருக்கிறேன்:
இடைத்தேர்தலை எப்போது வைப்பார்கள் என்று நானும் வெறியோடு தான் இருக்கிறேன், கொலைவெறியோடு இருக்கிறேன். இவ்வளவு கஷ்டப்பட்டு உடற்பயிற்சியும் கராத்தே பயிற்சியும் எடுத்துக்கொண்டுப் போய் ஒருவனை அடிக்க வேண்டுமா என்று கோபம் வரும். அதேபோலத்தான் அரசியல் களத்திலும் வெறியாகிக் கொண்டிருக்கிறது. என்ன பண்ணப்போகிறேன் என்று எனக்கே தெரியாது” என்று கூறி, வரும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி மாபெரும் வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.