தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!
Weather Update: கீழ்மட்ட வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களின் வானிலை நிலவரம் பற்றிய முழு விவரம்.
Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (ஆகஸ்ட் 3, 2026) கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்று புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு:
நாளை (ஆகஸ்ட் 04) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 05-08-2026 முதல் 07-08-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கர்நாடகா கபினி அணையில் நீர் திறப்பு 25,000 கன அடியாக அதிகரிப்பு.. தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு!!
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று (ஆக.03) தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடைய 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல், 03-08-2026 முதல் 05-08-2026 வரை மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், குறிப்பிட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.