ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை!
Tamil Nadu School Education Department : தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பள்ளிக் கல்வித் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மேலும், பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அரசு பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பள்ளிகளின் வளாகம், அனைத்து வகுப்பறைகள், சமையல் அறை, கழிவறை, தலைமை ஆசிரியர் அறை, கை கழுவும் இடம் ஆகிய இடங்கள் தூய்மையாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் வைத்திருக்க வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் மேஜைகள் மற்றும் நாற்காலிகள், மாணவர்கள் அமரும் பெஞ்சுகள், மேஜைகள், தலைமை ஆசிரியர் அறையில் உள்ள அனைத்து பொருட்களையும் சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள கொடி கம்பங்கள் சீரமைப்பு
மேலும், பள்ளிகளில் உள்ள தேசியக்கொடி ஏற்றும் கொடி கம்பம் முறையாக சீர் செய்யப்பட்டு குறைபாடுகள் எதுவும் இல்லாத வகையில் உரிய வர்ணம் பூசப்பட்டு தொடர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளிகளின் பெயர் பலகை தொலைவிலிருந்து பார்க்கும்போது, பொதுமக்களின் பார்வைக்கு நன்கு புலப்படும் வகையில் வர்ண பூச்சிகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள திறன் பலகைகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் முறையாக சுத்தப்படுத்தி இருக்க வேண்டும்.
மேலும் படிக்க: தவெக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 இடங்கள்? டெல்லியில் ராகுல் காந்தியுடன் எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை!




சமயலறை தூய்மையாக இருத்தல் வேண்டும்
மேலும், இணையதள வசதி முறையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கணினிகள் மற்றும் லேப்டாப்புகள், கையடக்க கணினிகள் ஆகியவை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சத்துணவு தயார் செய்யும் சமையலறை கரி படிந்த நிலையிலோ, தூசி படிந்த நிலையிலோ அல்லது சிலந்தி வலைகளுடனோ அசுத்தமாக இருக்க கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் கழிவு சேகரிப்பு தொட்டிகள், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடி இருக்குமாறு மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்த இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.
பள்ளிகளுக்கு பாட புத்தகம் விநியோகம்
ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் இருப்பின் அவற்றின் உறுதி தன்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும், 2026-27 கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை, விலையில்லா பாட புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் ஆகியவை அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “திமுகவில் அதிரடி மாற்றங்களை கொண்டு வரப்போகிறேன்”.. மு.க.ஸ்டாலினின் புதிய முன்னெடுப்பு!!