உறுதியானது பெண்கள் பாதுகாப்பு.. களமிறங்கியது சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை.. அத்துமீறினால் அதிரடிதான்!
Singa Pengal Special Force : சேலம் மாவட்டத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. இந்த படையை மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி தொடங்கி வைத்தார் .
தமிழகத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் ஐ.ஜி. தலைமையில் சிங்கப்பெண்கள் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார். தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்ற முதல் நாளே கையெழுத்திட்ட திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சேலம் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி தொடங்கி வைத்தார். இந்த அதிரடிப் படையில் மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையில், சூரமங்கலம் சரக உதவி ஆணையர் ரமளி ராமலட்சுமி கண்காணிப்பில் காவல் உதவி ஆய்வாளர் அருள்மொழி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் தலைமை காவலர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
சிறப்பு அதிரடிப்படைக்கு தேவையான ரோந்து வாகனம்
இந்த அதிரடிப்படையினர் ரோந்து மேற்கொள்வதற்கு தேவையான நான்கு சக்கர வாகனம் மற்றும் தொடர்பு கொள்வதற்கான சாதனங்கள், 24 மணி நேரமும் செயல்படும் கேமரா உள்ளிட்ட இதர வசதிகள் அந்த வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவானது குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதும், குற்ற சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து தடுப்பதும், சட்டவிரோத மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பது ஆகிய பணிகளில் ஈடுபடுவர்.
மேலும் படிக்க: ஓய்வு பெற்ற எஸ்ஐ மகள் கொன்று புதைப்பு.. கள்ளத் தொடர்பால் காண்டிராக்டர் மனைவி கொடூர செயல்.. தூத்துக்குடியில் அதிரவிடும் சம்பவம்!




பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு
இதேபோல, சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பன உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபடுவர். இதே போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவுகள் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு இந்த அதிரடிப்படை குழுவானது ஏற்பாடு செய்யும். கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை செயல்படும் விதம்
பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் விழிப்புணர்வு மேற்கொள்வது. மேலும். கல்வி நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபடுவார்கள்.
மேலும் படிக்க: மே 19 ஆம் தேதி வரை வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு விவரம் இதோ..