சென்னை ஐசிஎஃப்-இன் அடுத்த அதிரடி.. மெட்ரோ வசதிகளுடன் பறக்கும் ரயில்.. தயாராகும் புதிய இமு பெட்டிகள்!
Chennai ICF EMU Train Manufacture : சென்னை ஐ. சி. எஃப் ரயில் பெட்டிகள் தயார் செய்யும் தொழிற்சாலையில், தானியங்கி கதவு, மின்னனு திரை உள்ளிட்ட புதிய வசதிகளுடன் இமு ரயில் பெட்டிகள் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் நிறுவனம் (ஐசிஎஃப்) செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு விதமான ரயில்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் இமு வகையிலான மின்சார ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் குறுகிய தொலைவு மற்றும் தொலைதூர ரயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இமு வகை ரயில்களில் சுமார் 8 முதல் 12 பெட்டிகள் வரை பொருத்தப்பட்டிருக்கும். இந்த ரயிலில் உள்ள கதவுகள் அனைத்தும் திறந்த வெளியாகவே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இமு வகை புறநகர் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூட்டம் கூட்டமாக பெட்டிகளின் கதவு பகுதிகளில் நின்றவாறு பயணிக்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. அதே வேளையில் ரயிலின் உள்பகுதியில் கூட்டத்தின் நடுவே நிற்கும் போது தாங்கள் இறங்குவதற்கான ரயில் நிலையம் வந்துவிட்டதா என அறிவதற்கான வசதியும் இல்லாமல் போகிறது.
தானியங்கி கதவுடன் இமு ரயில்கள் தயாரிக்கும் பணி
இதன் காரணமாக இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தவற விட்டு வேறு ரயில் நிலையங்களில் இறங்கும் சூழலும் உள்ளது. இந்த நிலையில், பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் முதல்முறையாக தானியங்கி கதவுகளுடன், ரயில் நிலைய தகவல்கள் உள்ளிட்டவற்றை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையிலான மின்னணு திரைகளுடன் மெட்ரோ ரயில் வசதியுடன் கூடிய பெட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.. பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.. எஸ்.பி.வேலுமணி தரப்பு போர்க்கொடி!




இமு ரயிலில் 4,695 பயணிகள் பயணிக்க முடியும்
இதில், புதிய குளிர்சாதனமற்ற மின்சார பல்பிரிவு ரயில் ( குளிர்சாதன வசதி இல்லாத இமு ரயில்) எனப்படும் அந்த ரயிலில் 12 பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், ஒரே நேரத்தில் 1,003 பயணிகள் அமர்ந்தும், 3,692 பயணிகள் நின்று கொண்டு பயணிக்கலாம். அதன்படி, மொத்தம் 4,695 பயணிகள் ஒரே நேரத்தில் ரயிலில் பயணிக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரயிலானது துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியம் போன்ற சில உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இமு ரயிலில் பயணிகளுக்கான தகவல் வசதி மற்றும் மின்னணு திரை ஆகியவை உள்ளன.
இமு ரயிலில் உள்ள புதிய அம்சங்கள்
இதில், மெட்ரோ ரயிலில் இருக்கும் வசதிகளை போல ரயில் நிற்கும் நிலையங்கள், அடுத்து வரக்கூடிய ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல, ரயிலில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கதவுகள் மூடப்படாமல் இருந்தால் ரயில் இயங்காதவாறு புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், காற்றோட்டத்துக்காக ஜன்னல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த ரயில்கள் வடக்கு ரயில்வே மண்டலத்துக்காக தயார் செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி… அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் உத்தரவு!