அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி… அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் உத்தரவு!
Govt Employees DA Increase: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவர்.
தமிழகத்தில் கடந்த மே 10-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சி பொறுப்பேற்றது. அன்றைய தினம் முதல்வராக பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய் சிங்க பெண்கள் சிறப்பு பாதுகாப்பு படை, போதைப் பொருள் தடுப்பு படை, வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் ஆகிய மூன்று அறிவிப்புகளுக்கு கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில்கள் அருகே உள்ள மது கடைகளை அடைக்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டார். அதன்படி, சுமார் 717 மது கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில், மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதே போல, புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 உதவித்தொகை அதிரடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எனது தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உறுதிமொழி ஏற்றுள்ளது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழு வீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வு
அந்த வகையில், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது அரசு ஊழியர்கள் பெற்று வரும் அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1- ஆம் தேதி முதல் கணக்கில் கொள்ளப்படும்
இதன் மூலம், தமிழகத்தில் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயனடைவார்கள். இவர்களுக்கு, வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,230 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். தற்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி கடந்த ஜனவரி 1- ஆம் தேதி முதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வரவு வைக்கப்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – இதுதான் உங்க மாற்றமா? மு.க.ஸ்டாலின் கேள்வி