மே 14, 2026: தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “என்ன ஆனாலும் சூரியன் ஒருபோதும் மறையாது; மீண்டும் உதித்தே தீரும். இது இயற்கை நியதி மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் கூட” என அவர் தெரிவித்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை அமைக்க முடியாததற்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் ஸ்டாலின் கூறினார். “வெற்றி கிடைத்தால் அதன் பெருமையை ஏற்றுக்கொள்ளும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை” என அவர் தெரிவித்தார்.
யாரையும் குறை சொல்ல வேண்டாம்:
மேலும், “யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். தோல்வியின் போது ஆதங்கம் இருப்பது இயல்பு. ஆனால் அது பழிசுமத்தலாக மாறக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக ஆய்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்த அவர், அதற்காக தலைமைக் கழகத்தின் சார்பில் தனி குழு அமைக்கப்படும் என்றார். அந்த குழு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை சந்தித்து 20 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என கூறினார்.
மேலும் படிக்க: அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி… அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் உத்தரவு!
கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்க தனி இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார். “கழகம் இந்த தேர்தலில் செய்த தவறுகள் என்ன? மக்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்? என்பதை அனைவரும் வெளிப்படையாக தெரிவிக்கலாம்” என்றார்.
சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட வேண்டும்:
சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். “முன்பு டீக்கடைகளில் பேசப்பட்ட அரசியல், இப்போது சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. எனவே கழகத்தினர் அனைவரும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தினார்.
கட்சிக்குள் ஒற்றுமை அவசியம் என்றும், கோஷ்டி அரசியலை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “நமக்குள் ஒற்றுமை இல்லையெனில் வெற்றி சாத்தியமில்லை. கட்சி பலவீனமாக இருக்கும் இடங்களில் நிர்வாகிகளுக்குள் மோதல் உள்ளது; அதை சரிஅலஒசெய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இந்த தோல்வி தற்காலிகமானது
சட்டமன்றத்தில் தி.மு.க. திறமையான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார். இறுதியாக, “இந்த தோல்வி தற்காலிகமானது. திட்டமிட்டு தீவிரமாக உழைத்தால் மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.