அதிமுக வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்ய தயார்.. எடப்பாடி கே.பழனிசாமி
AIADMK General Secretary Edappadi K Palaniswami: அதிமுகவின் வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியில் உள்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், எடப்பாடி மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ். பி. வேலுமணி தரப்புக்கு இடையே உள்கட்சி மோதல் விவகாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது முதல் தற்போது வரை அதிமுக என்ற இயக்கத்தை கட்டி காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஆன எனது செயல்பாட்டை தமிழக மக்களும், கட்சியின் தொண்டர்களும் நன்கு அறிந்திருப்பார்கள்.
அதிமுகவுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்
எனக்கு பிறகு எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று சூளுரைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையே நிரூபிப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன். தற்போது, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு இழந்தாலும், நாம் உணர்வு பூர்வமாக செயல்பட்டு மீண்டும் நல்லாட்சியை அமைத்திட பாடுபடுவோம். தமிழக மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க: எடப்பாடி vs சி.வி.சண்முகம்.. அதிமுகவின் அடுத்த கட்டம் என்ன? பரபரக்கும் தமிழக அரசியல்!!




இரு குழுவாக பிரிந்துள்ள அதிமுகவினர்
இதற்கு கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியே சந்தித்து இருந்தது. இதன் காரணமாக, எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் மறு குழுவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதில், எஸ். பி. வேலுமணி தலைமையிலான குழு தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆளுநரிடம் தனித்தனியே புகார் மனு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொறடாவின் உத்தரவை மீறியதாக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதே போல, எஸ். பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி தலைமையிலான 22 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர். இதனால், அதிமுகவில் மோதல் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: விஜய்க்கு ஆதரவு: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா?