சேலத்தில் கொடூர சம்பவம்.. 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து ஒராண்டாக கூட்டு பாலியல் வன்கொடுமை.. காமுகன்கள் 4 பேர் கைது!
Salem Gang Harassment : சேலம் மாவட்டத்தில் 13 வயது சிறுமிக்கு மது அருந்த பழக்கம் செய்து ஒராண்டுக்கும் மேலாக ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதில், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர், கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சக தோழிகளுடன் இணைந்து அந்தப் பகுதியில் உள்ள தனியார் பூங்காவுக்கு சென்று விளையாடுவது வழக்கமாகும். அதன்படி, தனது தோழிகளுடன் 13 வயது சிறுமி அந்த பூங்காவுக்கு சென்றுள்ளார். அங்கு, அந்த சிறுமிக்கு சிலர் திட்டமிட்டு மது கொடுத்து பழக்கம் ஆக்கி உள்ளனர். இதனால், அந்த சிறுமி மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த நபர்கள் அந்த சிறுமியை தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால், காலப்போக்கில் அந்த சிறுமியின் நடத்தையில் மிகப்பெரிய மாற்றம் தெரியவந்தது. இதனை, அந்த சிறுமி பயிலும் தலைமை ஆசிரியர் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார்.
சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த தலைமை ஆசிரியர்
இது குறித்து, அந்த சிறுமியிடம் தலைமை ஆசிரியர் விசாரித்துள்ளார். இதில், தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்கு தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்த நிலையில், கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில், இந்த வக்கிரத்தில் ஈடுபட்டவர்களின் விவரம் தெரியவந்தது.
மேலும் படிக்க: காவிரி நீர் விவகாரம்… கர்நாடக மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!




4 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் அவருடைய கைது செய்தனர். இது மட்டும் இன்றி, சிறுமிக்கு மது விநியோகம் செய்தது மற்றும் இந்த வன்கொடுமை சம்பவத்தின் பின்னணியில் தொடர்புடையவர்களாக கருதப்படும் மேலும் 14 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதில், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்
அந்த தனிப்படை போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் நாட்களில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைந்து கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாநகர காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.. அமைச்சர் அருண்ராஜ்