பீகார் இளைஞர்களை கடத்தி பணம் பறிக்க முயற்சி.. ஆட்டோர் ஓட்டுநர்கள் 4 பேர் கைது.. பூக்கடை போலீசார் அதிரடி!
Bihar Youths Kidnapped : சென்னையில் வேலைக்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந் தஇளைஞர்களை 5 பேரை ஆட்டோ ஓட்டுநர்கள் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய நிலையில், 4 பேரை பூக்கடை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டம், மாதவரம் கே. பி. கே. தெருவை சேர்ந்தவர் நரேந்திரன் ( 39 வயது). இவர், சென்னை பட்டரவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சாதுகுமார் ( 23 வயது) உள்ளிட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், சாது குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான பீகார் மாநிலத்திற்கு சென்றிருந்தார். அங்கு, விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பிய போது, அவரது நண்பர்களான பவன்குமார் ( 23 வயது), குல்சன்மன்ஜி ( 20 வயது), முகேஷ் குமார் ( 22 வயது) ஆகியோர் தங்களுக்கும் உனது நிறுவனத்தில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். அதன்படி, சாது குமாரும் தனது நண்பர்களை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.
பீகார் இளைஞர்களை கடத்திய ஆட்டோ ஓட்டுநர்
அவர்கள், பீகாரில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தனர். அங்கிருந்து பட்டரவாக்கம் செல்வதற்காக ஆட்டோவில் புறப்பட்டனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் அவர்களை பட்டரவாக்கம் அழைத்து செல்லாமல் கிளாம்பக்கத்திற்கு அழைத்து சென்றார். இதனை அறிந்த சாது குமார் உடனடியாக தனது நிறுவனத்தின் உரிமையாளர் நரேந்திரனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனே, ஆட்டோ ஓட்டுனருடம் நரேந்திரன் பேசியபோது ஒருவருக்கு ரூ.1,500 வீதம் 5 பேருக்கு ரூ.7,500 தந்தால் தான் அவர்களை அழைத்து வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழும்.. மு.க.ஸ்டாலின் உயரத்துக்கு இந்த கருத்து ஏற்புடையது அல்ல.. இந்திய கம்யூ. மு. வீரபாண்டியன்!




தனியார் நிறுவனத்தில் வேலைக்கு விட்டு பணம் பெற்றார்
அப்போது, அவர்களை பட்டரவாக்கம் அழைத்து வந்தால் நீங்கள் கேட்ட பணத்தை தருவதாக நரேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் பீகார் இளைஞர்களை அம்பத்தூர் பகுதியில் உள்ள அத்திப்பட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டு விட்டு அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.8,500 வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். நீண்ட நேரம் ஆகியும் பீகார் இளைஞர்கள் வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த நரேந்திரன் செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
ஆட்டோ ஒட்டுநர் உள்பட 4 பேர் கைது
பின்னர், இது தொடர்பாக பூக்கடை காவல் நிலையத்தில் நரேந்திரன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சாது குமாரின் செல்போன் எண் மூலம் அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களான பட்டினப்பாக்கத்தை சேர்ந்த நெப்போலியன், துரைப்பாக்கத்தை சேர்ந்த மகேந்திரன், மணி, நாராயண மூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: அதிமுக வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.. நீதிமன்றத்தில் இசக்கி சுப்பையா பதில் மனு!