ஜூலை 10, 11-ல் கரூர் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய்.. உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க திட்டம்..
CM Vijay Visit To Karur: வருகிற ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் விஜய், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூன் 30, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், வருகிற ஜூலை 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின் போது கரூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.
அதேபோல், கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் – 41 பேர் உயிரிழப்பு:
2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் தமிழ்நாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிஐ மூலம் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா.. கரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு..
ரூ. 20 லட்சம் நிதியுதவி:
சம்பவம் நடைபெற்ற உடனடியாக, பாதுகாப்பு காரணங்களாலும் காவல்துறையின் அறிவுறுத்தலினாலும், முதலமைச்சர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, காணொலி காட்சி வாயிலாக அவர் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, 2025 அக்டோபர் 27-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை பனையூருக்கு வரவழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்து, அந்தத் தொகை உடனடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. எதிர்காலத்திலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்தார்.
கரூர் செல்லும் முதல்வர் விஜய்:
இந்த நிலையில், வருகிற ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் விஜய், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கரூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், புதிய வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். கரூர் பயணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.