எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா.. கரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு..
நேற்று அதிமுக முன்னாள் அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கரும் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் நேரில் வழங்கினார். பின்னர் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் சட்டமன்றத் தொகுதியும் அதிகாரப்பூர்வமாக காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
ஜூன் 30, 2026: அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், நேற்று தனது ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜெ.சி.பி. பிரபாகரிடம் நேரில் வழங்கியிருந்தார். இந்த நிலையில், அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கரூர் சட்டமன்றத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏக்கள்:
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமைந்திருந்தாலும், அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, எதிர்க்கட்சியான அதிமுகவில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், கட்சியினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்தனர். இதனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு, தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்தன. இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு:
இந்தச் சூழலில், நேற்று அதிமுக முன்னாள் அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கரும் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் நேரில் வழங்கினார். பின்னர் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் சட்டமன்றத் தொகுதியும் அதிகாரப்பூர்வமாக காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: த.வெ.க தலைமையில் புதிய கூட்டணி? நாளை நடக்கும் கூட்டத்திற்கு தோழமை கட்சி தலைவர்களுக்கு அழைப்பு..
இதன் மூலம், தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமாவால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 41 உறுப்பினர்களாக குறைந்துள்ளது.
7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்:
இதனால், அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் கரூர் தொகுதியும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் ஏழு தொகுதிகளில் ஒரே கட்டமாக இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் பின்னணி மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.