பெற்றோர் திட்டியதால் கோபித்து கொண்டு ஓட்டம்.. சென்னையில் மாயமான சிறுவர்களை தேடும் காவல்துறை!
Chennai Crime : சென்னையில் வீட்டு வேலைகளை பார்க்காத சிறுவர்களை பெற்றோர் திட்டிய காரணத்தால் அவர்கள் வீட்டை விட்டு காணாமல் போய் உள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாங்காடு போலீசார் வழக்குப் பதிந்து சிறுவர்களை தேடி வருகின்றனர் .
சென்னை மாவட்டம், மாங்காடு பகுதி அம்பாள் நகரை சேர்ந்தவர் டில்லி துரை. இவர், அந்த பகுதியில் சொந்தமாக பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 16 வயதில் மகள், 12 வயதில் மகன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் மாங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் முறையே 12- ஆம் வகுப்பும் மற்றும் 9- ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். டெல்லி துரை மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் பழ கடைக்கு காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வேலை முடிந்து வீடு திரும்புது வழக்கம் ஆகும். இந்த நிலையில், வழக்கம் போல நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) ஜூலை 5- ஆம் தேதி டில்லி துரை மற்றும் அவரது மனைவி ஆகியோர் அவசர அவசரமாக பழ கடைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டில் இருக்கும் வேலைகளை செய்யுமாறு குழந்தைகளை அவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், சிறுமி
ஆனால், அந்த வேலைகளை குழந்தைகள் செய்யாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால், டில்லி துரை மற்றும் அவரது மனைவி ஆகியோர் குழந்தைகளை கண்டித்ததாக தெரிகிறது. பின்னர், அவர்கள் பழ கடைக்கு புறப்பட்டு சென்று விட்டனர். பெற்றோர் திட்டியதால் இரு குழந்தைகளும் மன வருத்தம் அடைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இரவில் பழ கடையில் வேலைகள் முடிந்து தம்பதி இருவரும் வீடு திரும்பிய நிலையில், குழந்தைகளை வீட்டில் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க: வாட்ஸ் ஆப் DP-யை மாற்றி வலை.. நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் மோசடி முயற்சி!




சிறுவனின் கைப்பேசி எண் மூலம் விசாரணை
உடனே, அக்கம் பக்கத்தில் குழந்தைகளை தேடி பார்த்தனர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், பயந்து போன பெற்றோர் இது தொடர்பாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும், சிறுவர்கள் கொண்டு சென்ற செல்போன் எண்ணை வைத்து, அவர்கள் இருப்பிடத்தை போலீசார் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாம்பரம் பகுதியில் சுவிட்ச் ஆப் ஆன செல்போன்
இதில், குழந்தைகளின் செல்போன் அவர் தாம்பரம் பகுதியில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மாயமான 2 சிறுவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையில் வீட்டு வேலை செய்யாத சிறுவர்களை பெற்றோர் திட்டிய காரணத்தால் வீட்டில் இருந்து மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பெற்ற மகனை பலி வாங்கிய கள்ளக்காதல்.. மயிலாடுதுறையில் அரங்கேறிய கொடூர கொலை.. தாய்- கள்ளக்காதலன் கைது!