ஆளில்லாத காட்டுப்பகுதி.. சிறுமிக்கு 6 பேர் கூட்டு வன்கொடுமை.. கடைசி நேரத்தில் தப்பிய தோழி.. பரபரப்பில் சென்னை!
Chennai Girl Gang Harassment: சென்னையில் 12- ஆம் வகுப்பு மாணவியை அவரது நண்பர் பைக்கில் அழைத்து சென்று சக நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 6 பேரை பிடித்து போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாவட்டம், பரங்கிமலை பகுதியை சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள். இவர், 12- ஆம் வகுப்பு படித்த நிலையில், அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவில் தோல்வி அடைந்திருந்தார். இதன் காரணமாக, மீண்டும் 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்காக படித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு சோர்வாக இருந்தார். இதனால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். இதில், குன்றத்தூர் அருகே தன்னுடன் படித்த சக மாணவியை பார்ப்பதற்காக சென்ற போது, சிலரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி சிறுமி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுமி கூட்டு வன்கொடுமை
இது தொடர்பாக மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சக மாணவிக்கு உடல் நலக்குறைவால் அவரை பார்ப்பதற்காக குன்றத்தூர் பகுதிக்கு இந்த மாணவி சென்றுள்ளார். அங்கு, அவரது நண்பர் இருசக்கர வாகனத்தில் வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அப்போது, தனது நண்பர்களையும் வர செய்து அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்று இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் படிக்க: தாயின் பிரிவு தந்த ஏக்கம்.. இந்த உலகமே வேண்டாம்.. சோகத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!




6 பேரை பிடித்து போரூர் போலீசார் விசாரணை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில் குன்றத்தூர் அருகே உள்ள காலடிபேட்டையை சேர்ந்த சிறுமியின் நண்பர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் மற்றொரு தோழியும் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் பாதி வழியிலேயே தனது வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதனால், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பித்துள்ளார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தொடர் பாலியல் வன்கொடுமை
சென்னையில் சிறுமியை வீட்டில் விடுவதாக பைக்கில் அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவமும், சிவகங்கை மாவட்டத்தில் பெண் காவலரை சிலர் கூட்டு வன்கொடுமை செய்த சம்பவமும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரபல கபடி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு.. வலைவீசிய போலீஸ்!