தவெக எம்எல்ஏ வெற்றிக்கு எதிர்ப்பு.. திருப்பத்தூரில் மறு வாக்கு எண்ணிக்கை.. உயர்நீதிமன்றத்தில் பெரியகருப்பன் மனு தாக்கல்!
Tirupathur Constituency Recount Votes: திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் மனு தாக்கல் செய்துள்ளார். மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பெரிய கருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார். இதில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் பதிவான வாக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த வாக்கு நிராகரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் தொகுயில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை
இதன் காரணமாக திருப்பத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டு எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இதற்கும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிப்பதற்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் பெரிய கருப்பன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்.. 46 ஆயிரம் அட்டைகள் தயார்.. முதல்வர் விஜய் எடுக்கும் மூவ்!




தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு எதிராக மனு
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி தவெக அரசின் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் பங்கேற்க கூடாது என்று தடை ஆணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தடை ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதனால், தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி எம்எல்ஏ வாக்களித்திருந்தார்.
அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பியுள்ளது
தற்போதும், அவர் திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், ஒரு தபால் வாக்கு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்க: காலியான 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடைக்கோரி அதிமுக மனு.. நாளை மறுநாள் விசாரணை..