ஜனநாயகன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது.. சீமான் சொன்ன அடுத்த வார்த்தை.. விஜய் சேதுபதி விவகாரத்தில் விமர்சனம்!
NTK Seeman Comments Vijay Sethupathi Remarks : ஜனநாயகன் படம் நடித்தால் மட்டும் போதாது உண்மையான ஜனநாயகத்தை போற்றி அதன் மாண்பை காக்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யை நாம் தமிழர் கட்சி சீமான் விமர்சித்தார்.
தமிழகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி, தமிழக முதல்வர் விஜயை மறைமுகமாக விமர்சித்திருந்ததாக தமிழக வெற்றி கழகத்தினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டு சூழலை மையமாக வைத்து தலைமைத்துவம், அதிகாரம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்திருந்தார். பொதுவான கருத்துக்களை முதல்வர் விஜய்க்கு எதிராக பேசியதாக நினைத்துக் கொண்டு தவெகவினர் அவரை கடுமையாக விமர்சிப்பது கண்டனத்துக்குரியதாகும். விஜய் சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை. அதேபோல எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை.
ஜனநாயகத்தில் எழும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்
ஒரு விளையாட்டில் உருவான சூழலையும் மையமாக வைத்து தலைமைத்துவம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதனை உடனடியாக தங்களின் தலைவரோடு இணைத்து பார்த்து கருத்து சொன்னவரை தாக்க முற்படுவது ஏன் என்பது தெரியவில்லை. தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபம் கொள்ள செய்கிறது என்றால், ஜனநாயகத்தின் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள். இதுதான் நீங்கள் பேசி வரும் மாற்று அரசியலா.
மேலும் படிக்க: பூட்டிய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்.. 1.5 கோடி நகை-பணம் சுருட்டல்.. சிவகங்கையை உலுக்கிய துணிகர கொள்ளை!




தவெகவுக்கு சீமான் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்வி
இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா. இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா. இவ்வளவுதான் உங்கள் சகிப்புத்தன்மையா என்று கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், மக்கள் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது. அந்த கருத்து நமக்கு பிடிக்கவில்லை என்றால், அதனை மறுத்து பேசி எதிர் வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாக சென்று தனிநபரை திட்டி தீர்ப்பதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பு கிடையாது.
ஜனநாயகன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது
அரசியலுக்கு வந்த பின்னர் பாராட்டுகளை மட்டும் எதிர்பாராமல் விமர்சனங்களையும், கேள்விகளையும் எதிர்கொண்டாக வேண்டும். எனவே, விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை தங்கள் மீதான விமர்சனம் என்று தவறாக எண்ணி, அவரை இழிவு படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தனக்கு பிடித்த கருத்தை மற்றவர்கள் பேச வேண்டும் என நினைப்பது ஜனநாயகம் கிடையாது. ஜனநாயகன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது. உண்மையான ஜனநாயகத்தை போற்றி அதன் மாண்புகளை காக்க வேண்டும். கருத்தை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல்.. போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்த தவெக, திமுக வேட்பாளர்கள்!