அதிரடிக்கு பெயர்போன அஸ்ராக் கார்க்.. தமிழக உளவுத்துறை ஐ.ஜி-ஆக நியமனம்!
Tamil Nadu Intelligence IG Asra Garg : தமிழக உளவுத்துறை ஐ. ஜி.யான அவினாஷ் குமார் மாற்றப்பட்டு புதிய ஐஜியாக அஸ்ராக் கார்க்கை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர், தற்போது, வடக்கு மண்டல ஐ. ஜி. ஆக பணிபுரிந்து வருகிறார்.
தமிழகத்தின் உளவுத்துறை ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் இருந்து வந்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி, இவரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்திருந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த நிலையில், தமிழகத்தின் உளவுத்துறை ஐ. ஜி.யாக வடக்கு மண்டல ஐஜியான அஸ்ராக் கார்க்கை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு பொறுபேற்றுள்ள நிலையில், அரசு உயர் பதவிகளில் உள்ளவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் உளவுத்துறை ஐஜி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் உளவுத்துறை முக்கிய துறையாக இருந்து வருகிறது. இந்த துறையின் ஐஜியாக அஸ்ராக் கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை பற்றிய விவரம் வருமாறு:- மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அஷ்ராக் படிப்பில் சிறந்து விளங்கி வந்தார்.
சட்டம் – ஒழுங்கு நடவடிக்கையில் அதிரடி
அதில், சிவில் சர்வீஸ் தேர்வில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கடந்த 2004 ஆம் ஆண்டு மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணைய தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்த இவர் தனது பணிக்காலத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். சென்னை மாநகரில் டிராபிக் டிவிஷன், சட்டம் ஒழுங்கு பிரிவு, சைபர் குற்றப்பிரிவு போன்ற துறைகளில் பணியாற்றி உள்ளார்.
மேலும் படிக்க: திருமாவளவனை முதல்வராக்க திமுக அணுகியது – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு




குற்ற புலனாய்வு – சட்டம் – ஒழுங்கு பராமரிப்பில் மிகுந்த ஆர்வம்
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில், குறிப்பாக திருவள்ளூர் மதுரை வேலூர் போன்ற மாவட்டங்களில் கடுமையாக மேற்கொள்ளப்பட்ட சட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு பெயர் பெற்றவர். இது மட்டும் இன்றி மாநிலத்தின் குற்றவியல் புலனாய்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகியவற்றில் மிகுந்த அனுபவம் மிக்கவராவார்.
சைபர் குற்றங்களில் நவீன முறைகள்
முக்கியமான சட்ட விரோத செயல்கள், கொள்ளை கடத்தல், பெண்கள் பாதுகாப்பு சம்பவங்களில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும், சைபர் குற்றங்களில் நவீன முறைகளை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளும் திறமை, காவல்துறை செயல்பாடுகள் வெளிப்படையாகவும் கடுமையாகவும் நடத்தும் விதத்துக்காக புகழ்பெற்றவர் ஆவார்.
கரூர் சம்பவத்தில் எஸ்ஐடி குழுவின் தலைமை
தமிழகத்தின் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வழக்கு மண்டல ஐஜியாக பணிபுரிந்து வரும் அஷ்ரா கார்க் தற்போது உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழு இவரது தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை