AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீட் தேர்வு.. நாடாளுமன்றத்தில் திமுக – அதிமுக எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம்..

நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து அதிமுக எம்பி தம்பிதுரை மற்றும் திமுக எம்பி திருச்சி சிவா இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. அதேவேளையில், வந்தே மாதரம் மசோதா மீதான விவாதத்தில் பாஜக அரசு மக்களைப் பிளவுபடுத்துவதாகத் திமுக எம்பி கனிமொழி மக்களவையில் ஆவேசமாகப் பேசினார்.

நீட் தேர்வு.. நாடாளுமன்றத்தில் திமுக – அதிமுக எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம்..
திருச்சி சிவா, தம்பிதுரை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 31 Jul 2026 06:40 AM IST

டெல்லி, ஜூலை 31: நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா மற்றும் வந்தே மாதரம் பாடலுக்கான சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கும் மசோதாக்கள் மீதான விவாதங்களின் போது, இரு அவைகளிலும் தமிழக எம்பிக்களின் குரல் ஓங்கி ஒலித்தது. நீட் தேர்வின் பின்னணி மற்றும் மாநில அடையாளங்கள் குறித்த விவாதங்களில் திமுக, அதிமுக மற்றும் ஆளும்கட்சியான பாஜக இடையே கடும் மோதல் போக்கு நிலவியது.

இதையும் படிக்க : கடைசி நேரத்தில் ஆம்னி பஸ் கேன்சல்.. பணத்தையும் தராத நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம்!!

தம்பிதுரை – திருச்சி சிவா மோதல்:

மாநிலங்களவையில் பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மற்றும் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை மற்றும் திமுக எம்பி திருச்சி சிவா இடையே காரசார விவாதம் எழுந்தது. இதில், அதிமுக எம்பி தம்பிதுரை, “தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைவதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான். அப்போது மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தபோதுதான் இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசியல் ஆதாயத்திற்காக நீட் தேர்வை எதிர்ப்பது போல் நாடகமாடுகிறார்கள்” எனத் தம்பிதுரை கடுமையாகச் சாடினார்.

திமுக எம்பி திருச்சி சிவாவின் ஆவேசப் பதில்:

இதனால், தம்பிதுரையின் பேச்சைக் கடுமையாக எதிர்த்த திமுக எம்பி திருச்சி சிவா, “வரலாற்று உண்மைகளைத் திரித்துப் பேசக்கூடாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்ட போது அதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், அதன்பின்னர் வந்த பாஜக அரசு தான் சட்டத் திருத்தம் கொண்டுவந்து நீட் தேர்வைக் கட்டாயமாக்கியது. இதற்கு அன்றைய அதிமுக அரசும் விலக்கு பெற முடியாமல் கையெழுத்திட்டது” எனக் கூறி தம்பிதுரையின் கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இரு தலைவர்களுக்கும் இடையே தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால், அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் குறுக்கிட்டு, “மசோதா தொடர்பான விஷயங்களை மட்டும் பேசுங்கள்; மாநில அரசியலை இங்கு விவாதிக்க வேண்டாம்” எனக் கூறி இருவரையும் அமைதிப்படுத்தினார்.

தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம்:

அதேவேளையில், மக்களவையில் வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கும் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். “தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தான் முதன்மை பெற்றுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி, கலாச்சாரம் மற்றும் மாநிலப் பாடல்கள் மீது தனி மரியாதை உண்டு. இதுபோன்ற மசோதாக்கள் மூலம் மாநிலப் பாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு அவமதிக்கிறது.”

இதையும் படிக்க : தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க வேண்டும்.. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

மத்திய அரசு மீது கடுமையான விமர்சனம்:

“வந்தே மாதரம் பாடலைத் தங்களின் தேசியவாத அளவுகோலாக மாற்ற முயலும் பாஜக அரசு, அதை ஏற்காதவர்களை தேசத்துரோகிகள் என முத்திரை குத்துகிறது. ஆனால், பல்வேறு தேசிய இனங்களும் மொழிகளும் வாழும் இந்தியாவில், ஒரே கலாச்சாரத்தைத் திணித்து நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் மத்திய அரசே உண்மையான தேசத்துரோகச் செயலில் ஈடுபடுகிறது” எனக் காட்டமாகத் தெரிவித்தார். தமிழக எம்பிக்களின் இந்த காரசார விவாதங்களும், மத்திய அரசுக்கு எதிரான ஆவேச உரைகளும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

Follow Us