காஞ்சிபுரத்தில் பணத்துக்காக பிரசவம் தடுத்து நிறுத்தம்.. தாய்-சிசு பரிதாபமாக உயிரிழப்பு.. குழந்தை வெளியேறியநிலையில் கொடூரம்!
Kanchipuram Mother And Infant Die : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 20 ஆயிரம் கடனுக்காக பிரவச வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்காததால் சம்பவ இடத்திலேயலே தாய் மற்றும் சேய் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் பகுதியில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த ஆனந்தன் ( 40 வயது). இவரது மனைவி தேன்மொழி ( 35 வயது) ஆகியோர் வசித்து வருகின்றனர். தேன்மொழி 9 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் இருவரும் அரக்கோணம் சாலையில் உள்ள வெள்ளை கேட் பகுதியில் மரம் வெட்டும் வியாபாரயின் இடத்தில் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இதற்காக, மரம் வெட்டும் உரிமையாளர் ஆறுமுகம் என்பவர் அமைத்துக் கொடுத்த தார்ப்பாய் கூடாரத்தில் ஆனந்தன் மற்றும் அவரது மனைவி தேன்மொழி ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களோடு மகள் காவியா மருமகன் முத்து ஆகியோரும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், விறகு கடை உரிமையாளர் ஆறுமுகத்திடம் ரூ. 20 ஆயிரம் முன் பணத்தை ஆனந்தன் வாங்கி உள்ளார்.
பிரசவ வலியால் துடித்த பெண்ணை தடுத்து நிறுத்திய நபர்
இந்த நிலையில், தேன்மொழிக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆனந்தன் முயற்சி செய்துள்ளார். ஆனால், விறகு வியாபாரி ஆறுமுகம் அவர்களை தடுத்து நிறுத்தியதுடன், தன்னிடம் வாங்கிய முன்பணம் ரூ. 20 ஆயிரத்தை திரும்ப கொடுக்காமல் மரம் வெட்டும் இடத்தை விட்டு செல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளார். இதனால், பிரசவ வலியால் துடித்த தேன்மொழியின் வயிற்றில் விளக்கெண்ணெய் தடவி விட்டு விட்டு அவர் வேலைக்கு சென்றுள்ளார்.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் கொடூரம்.. மாமனாரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மருமகன்.. 6 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!
சிசு பாதி வெளியேறிய நிலையில் தாய்- சேய் உயிரிழப்பு
இதனால், தார்ப்பாய் கூடாரத்தில் தனியாக இருந்த தேன்மொழிக்கு இயற்கையாகவே பிரசவம் நடக்கத் தொடங்கியது. இதில், சிசுவின் உடல் பாதி வெளியேறிய நிலையில், தேன்மொழிக்கு அதிக வலி மற்றும் அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பெண் வழியே தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். ஆனால், அவரை காப்பாற்ற யாரும் வராத நிலையில், கர்ப்பிணி தேன்மொழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
பொன்னேரிக்கரை காவல் நிலையம் முன் மறியல்
பின்னர், மாலையில் வேலை முடிந்து தார்ப்பாய் கூடாரத்துக்கு சென்ற ஆனந்தன் தனது மனைவியின் நிலையை பார்த்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த உரிமையாளர் ஆறுமுகம், இது இயற்கை மரணம் என்று கூறி, படிப்பறிவு இல்லாத ஆனந்தனிடம் ரூ. 2 ஆயிரத்தை மட்டும் கொடுத்துவிட்டு உடலை சிங்கவாடிவாக்கம் இருளர் குடியிருப்புக்கு கொண்டு செல்லுமாறு அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மக்கள் பொன்னேரிகரை காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: காட்டை காக்க வேண்டிய வனத்துறை அதிகாரி செய்த காரியம்.. உடுமலைப்பேட்டையில் சிக்கிய யானை தந்தம்.. 3 பேருக்கு கைவிலங்கிட்ட போலீஸ்!