வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் – தமிழக சட்டசபையில் தீர்மானம்
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதாவை (FCRA) ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தனித் தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். எந்தவொரு மசோதாவும் சொத்துரிமை பாதுகாப்பு, கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 11 : வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதாவை (FCRA) ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தனித் தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர் இந்த மசோதா சிறுபான்மையினர் நிறுவனங்களை பாதிக்கும் என்றும் எந்தவொரு மசோதாவும் சொத்துரிமை பாதுகாப்பு, கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற தமிழக சட்டசபையில் தீர்மானம்
தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து பேசினார். அப்போது பேசிய அவர், சிறுபான்மையினர் நிறுவனங்களை பாதிக்கும். வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதா, 2026, தற்போதைய வடிவில், எப்சிஆர்ஏ பதிவு காலாவதியாகுதல், புதுப்பிக்கப்படாமை, புதுப்பிப்பு மறுக்கப்படுதல், பதிவு ரத்து அல்லது ஒப்படைக்கப்படுதல் போன்ற காரணங்களால் தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை அரசிடம் ஒப்படைத்தல், நிர்வகித்தல், மாற்றுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான விதிகள் குறித்து இம்மன்றம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.
இதையும் படிக்க : வீணாகும் மழைநீரை சேமிப்பது எப்படி? சௌமியா அன்புமணி சொன்ன யோசனை!




இவ்விதிகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும் என்றார்.
எனவே, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப்பெற்று, மாநில அரசுகள், தொண்டு, மத, கல்வி, மருத்துவ மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனை நடத்துமாறு மத்திய அரசை இம்மன்றம் வலியுறுத்துகிறது.
எந்தவொரு திருத்த மசோதாவும் இயற்கை நீதி, விகிதாசாரம், சொத்துரிமைப் பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். வெளிநாட்டு பங்களிப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன், சட்டப்பூர்வமாக செயல்படும் தொண்டு, கல்வி, மருத்துவ, மத, கலாசார மற்றும் சமூகநல அமைப்புகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.
இதையும் படிக்க : நீட் தேர்வு தனி தீர்மானம்.. ஒரணியில் நின்று ஆதரித்த உறுப்பினர்கள்.. ஒரு மனதாக நிறைவேறியது!
வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த மசோதா நன்கொடைகள் மூலம் எந்த மாநிலத்தில் என்னென்ன தொண்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதை தொண்டு நிறுவனங்கள், அதாவது என்ஜிஓக்கள் உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டு நன்கொடைகளை ஒருபோதும் மதமாற்றத்துக்கு பயன்படுத்தக் கூடாது. என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்யப்பட்டால், வெளிநாட்டு நன்கொடைகளால் உருவாக்கப்பட்ட என்ஜிஓக்களின் சொத்துகளை அரசு நிர்வாகமே கையாளும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.