சென்னையில் அதிகளவு பனி மூட்டத்துக்கு காரணம் என்ன…வானிலை மையம் விளக்கம்!
Meteorological Department : சென்னையில் இன்று அதிகாலை அதிகளவு பனி மூட்டம் நிலவியதற்கான காரணம் என்ன என்பதை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பனி மூட்டம் இந்த மாத இறுதி வரை நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது .
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியதை அடுத்து, அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக பனிப்பொழிவு இருந்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அதிக அளவு பனியின் தாக்கம் இருந்து வரும் நிலையில், பகல் நேரங்களிலும் பனிக்காற்று வீசி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 8) பனியின் தாக்கம் அதிக அளவு காணப்பட்டது. அதன்படி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிகாலை முதல் அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது. இதில், காலை 5:30 மணி முதல் 1,500 மீட்டராக இருந்த பார்வைத் திறன், காலை 6:30 மணி அளவில் 350 மீட்டராகவும், 7:30 மணி அளவில் 150 மீட்டராகவும் குறைந்தது.
சென்னையில் அதிகளவு பனி மூட்டம் நிலவ காரணம்
இதன் காரணமாக சென்னை பகுதியில் மின்சார ரயில்கள் மற்றும் சாதாரண ரயில்கள், பேருந்து போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் அதி காலையில் திடீர் பனி மூட்டம் ஏற்பட்டதற்கான காரணத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கி உள்ளது. இதில், அதிக அளவிலான ஈரப்பதம், மிதமானது முதல் அமைதியான காற்றின் நிலை, இரவு நேர குறைந்த வெப்பநிலை ஆகியவை அதிக அளவு பனி உருவாவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அதிகாலையில் தொடரும் பனிமூட்டம்.. படிப்படியாக உயரும் வெப்பநிலை.. வானிலை சொல்வது என்ன?




பிப்ரவரி மாத இறுதி வரை பனியின் தாக்கம்
இதே போல, பிப்ரவரி மாத இறுதி வரை தமிழகத்தின் சில மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் குறைந்தது முதல் மிதமான பனி மூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது இந்த ஆண்டு அதிக அளவு பனியின் தாக்கம் அதிக அளவு உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், காய்ச்சல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவற்றால் பெரிதளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் பனி மூட்டம் நிலவ வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி வரை திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் மிதமான பனி மூட்டம் நிலவ வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிக அளவு பனி மூட்டத்தால் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதன் காரணமாக அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய புறநகர் மின்சார ரயில்களும், சூலூர் பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களும் தாமதமாக இயக்க பட்டிருந்தன.
மேலும் படிக்க: சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு போலீஸ் தடை – தவெகவினர் கண்டனம் – என்ன நடந்தது?