Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பர்வதமலை ஏறும் பக்தர்களின் கவனத்துக்கு..புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு…மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

Parvathamalai: பர்வதமலை மீது ஏறும் பக்தர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், சிறுவர்கள் சிறுமிகள், முதியோர்களுக்கு மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடுகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன .

பர்வதமலை ஏறும் பக்தர்களின் கவனத்துக்கு..புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு…மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
பர்வதமலை மீது ஏற பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 08 Feb 2026 17:31 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள தென்மகாதேவமங்கலம் பகுதியில் சுமார் 4,560 அடி உயரத்தில் பர்வதமலை அமைந்துள்ளது. இந்த மலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் இடம் பெற்றுள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமி நாள் மற்றும் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகை தருவது வழக்கமாகும். இந்த மலை மீது உள்ள ஏணிப்படி, கிடப்பார நெட்டு, பிள்ளையார் நெட்டு ஆகிய பகுதிகளில் பாதைகள் மிக குறுகலாக இருந்து வருகிறது. எனவே, இந்த பாதை வழியாக பயணிக்கும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தள்ளு முள்ளு ஏற்படுவதுடன், சில பக்தர்கள் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே, இந்த சம்பவத்தை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதி

இதில், பர்வதமலை ஏறும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தினம் தோறும் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் பர்வதமலை ஏறுவதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதில், ஒரு மணி நேரத்துக்கு 100 பக்தர்கள் என்ற அளவில் பர்வத மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவர். நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 200 பக்தர்களுக்கு நேரடியாக அனுமதி அளிக்கப்படும்.

மேலும் படிக்க: மார்ச் மாத கிரக மாற்றம்.. இந்த 4 ராசிகள் உஷாராக இருக்கணும்!

சிறுவர்கள் -முதியோர்களுக்கு அனுமதி கிடையாது

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பருவதமலை ஏறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாலை நேரங்களில் மலை பகுதியில் இருள் சூழ்வதுடன், பக்தர்களுக்கு ஆபத்தான விதமாக மாறுவதால் நேர கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பர்வத மலை ஏறும் பக்தர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

பர்வதமலை ஏற ஆன்லைனில் முன்பதிவு

இந்த கட்டுப்பாடுகளுக்கு தகுந்த நபர்கள் மட்டுமே பர்வதமலை மீது ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படும். அவர்களும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தால் மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன் லைன் மூலம் முன் பதிவு செய்யும் போது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள் ஆகியவை உள்ளீடு செய்ய வேண்டும்.

பக்தர்களுக்காக மருத்து முகாம்கள்

பக்தர்களின் வசதிக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிக்காக அடிப்படை முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இதனிடையே, பருவத மலையில் இளைஞர்கள் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்து பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. அதன் அடிப்படையில், பருவதமலை அடிவாரத்தில் வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: மகா சிவராத்திரி 2026.. எந்த ராசியினர் எப்படி வழிபட வேண்டும்? வழிபாடு முறை..