நாளை 3 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் இயங்காது.. டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு..
Tasmac shops closed for 3 hours: திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு துறை நிறுவனங்களில் பணிபுரிவர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்ததி கடந்த 5 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை, பிப்ரவரி 08: தமிழ்நாடு மாநில வாணிப கழகம் எனும் டாஸ்மாக் நிறுவனத்தை தமிழக அரசே நேரடியாக கடந்த 22 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருகிறது. இதற்காக, 2003ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகலம் மூலமாக அரசே நேரடியாக பணியார்களை தேர்வு செய்து தற்போது சுமார் 25,000 பணியாளர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இதில், பணியாற்றும் பணியாளர்கள் தற்காலிக பணிநிலையில், குறைந்த தொகுப்பூதியத்தில், பணிவிதிகள் ஏதுமின்றி பல்வேறு சமூக சூழ்நிலைகளில் பணி பாதுகாப்பின்றி மனநெருக்கடியில்
சமூக பொருளாதார குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் படிக்க: குடிநீர் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் உறுதி… எச்சரிக்கை வாசகம் கட்டாயம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
5 நாட்களாக தொடரும் போராட்டம்:
குறைந்தபட்சம் 480 நாட்கள் பணிபுரிந்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும என தொழிற்சங்க சட்டங்கள் இருந்தும், இவர்கள் இதுவரை பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் (ஏஐடியுசி), உடன் இணைந்து, தமிழ்நாடு விற்பனையாளர் நல சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்களும் இணைந்து கடந்த 5 நாட்களாக சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள்:
அரசின் நிதி ஆதாரத்திற்கு, 23 ஆண்டுகளாக தற்காலிகமாக பணி செய்து வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்களை பயன்படுத்தாமல், மாற்று வழியில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
திமுக தேர்தல் வாக்குறுதி:
இந்த கோரிக்கைகள் குறித்து கடந்த காலங்களில் அமைச்சருடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பிலும் முன்வைக்கப்பட்டது. அமைச்சரும் தமிழக முதல்வருடன் பேசி நல்ல தீர்வை பெற்று தருவதாக உறுதியளித்தார். குறிப்பாக, திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு துறை நிறுவனங்களில் பணிபுரிவர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்ததி கடந்த 5 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: அதிகாலையில் கொட்டும் பனி.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை அப்டேட் இதோ!!
நாளை 3 மணி நேரம் டாஸ்மாக் கடையடைப்பு:
இந்த நிலையில், நாளை (பிப்.9) டாஸ்மாக் கடைகளில் மாநிலம் முழுவதும் 3 மணி நேர கடையடைப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மீண்டும் மூடப்படும். அந்தவகையில், நாளை டாஸ்மாக் கடை விற்பனை நேரம் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 3 மணி நேரத்திற்கு அடையாள கடைஅடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.