சீர்வரிசை வழங்குவதில் தகராறு.. மதுரையில் மருமகன் அடித்து கொலை.. தாய்மாமன் அதிரடி கைது!
Madurai Youth Murder : மதுரை மாவட்டத்தில் சீர்வரிசை வழங்குவது தொடர்பாக எழுந்த குடும்ப தகராறில் மனைவி கண் முன்னே மருமகனை தாய் மாமன் கட்டையால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டியை அடுத்த ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி ( 33 வயது). பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரி ஆகியவற்றை சொந்தமாக வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு பாரதி ( 30 வயது) என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சத்தியமூர்த்தி தனது இரு குழந்தைகளுக்கு காது குத்தும் விழா நடத்தினார். இந்த விழாவில் குடும்ப தகராறு காரணமாக சத்தியமூர்த்தியின் தாய் மாமனான தங்கமாயன் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்கமாயனின் மகள் லட்சுமி வீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் சீர்வரிசை அளிப்பது தொடர்பாக தங்கமாயன் மற்றும் சத்தியமூர்த்தி இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு சத்தியமூர்த்தி வேலைக்கு சென்று விட்டு ஊரு திரும்பிக் கொண்டிருந்தார்.
தங்கமாயனிடம் தட்டி கேட்க சென்ற கணவன் – மனைவி
அப்போது, எதிரே வந்து கொண்டிருந்த அவரது தாய் மாமன் தங்கமாயன் அவரை வழிமறித்து திடீரென தகராறில் ஈடுபட்டார். அவர்களிடையே தகராறு முற்றிய நிலையில், அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சத்தியமூர்த்தி தனது மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக, சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் தங்கமாயன் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர். இதில், தங்கமாயன் மற்றும் சத்தியமூர்த்தி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பானது.
மேலும் படிக்க: பக்தர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு: பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்




தாய்மாமன் கட்டையால் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு
இதில், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மோதல் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி அங்கு கடந்த பெரிய கட்டையால் சத்தியமூர்த்தி பலமாக தாக்கினார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சத்தியமூர்த்தி மயங்கி விழுந்தார். அவர்களை அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும் முடியாமல் போனது. பின்னர், பாரதி மற்றும் அருகில் இருந்தவர்கள் சத்தியமூர்த்தியை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கொலையாளியை கைது செய்த போலீசார்
அங்கு, சத்தியமூர்த்தி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி சத்தியமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாரதி அளித்த புகாரின் பேரில், சிந்து பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கமாயினை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பெண் குழந்தைக்கு தந்தையான சீமான் – குவியும் வாழ்த்து