“ஒரு மேயரை ஜெயிச்சு காட்டுங்க பாப்போம்!”.. உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஓபன் சவால்!
மேயர் என்கிற அந்த அகங்காரமும் திமிரும் திமுக என்கிற அதிகார மமதையால் வந்தது. "மக்களுக்குத் துரோகம் செய்யும் திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள்"திமுக தற்போது ஆட்சியை இழந்துவிட்டாலும், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள திமுக மேயர்களும், நகராட்சித் தலைவர்களும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார்.
சென்னை, ஜுன் 06: தமிழகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, அரசு விழாவில் சென்னை மேயர் பிரியாவால் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு கடுமையான சவால்களை முன்வைத்துப் பேசியுள்ளார். இதுகுறித்து நேற்றிரவு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தவெக சார்பில் திருவிக நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பல்லவி குறித்து உருக்கமாகப் பேசினார். “தேர்தல் நேரத்தில் கர்ப்பிணியாக இருந்தபோதும், அவர் ஒவ்வொரு தெருவாக நடந்து சென்று வாக்குச் சேகரித்தார். ‘தலைவரே நீங்க எனக்கு வாய்ப்பு கொடுத்துட்டீங்க, நான் நடந்து என் குழந்தையோடு பிரசாரம் செய்கிறேன்; என் குழந்தை பிறக்கும் போது நீங்கள் முதலமைச்சராக இருப்பீர்கள்’ என்று தலைவர் விஜய்யிடம் உணர்வுப்பூர்வமாகக் கூறி உழைத்தவர் அவர்” என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: “தவறு செய்தால் கடும் நடவடிக்கை!”.. முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை!
ஸ்டாலின் கொடுத்த திமிர்:
அப்படிப்பட்ட ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரை, சமீபத்தில் நடந்த ஒரு அரசு விழாவில் சென்னை மேயர் பிரியா ஒரு மெழுகுவர்த்தி கூட கையில் கொடுக்காமல் அவமரியாதை செய்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா சாடினார். “அரசு புரோட்டோகால் படி மேயருக்கு அடுத்த இடத்தில் இருக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினருக்கு அடிப்படை மரியாதை கூட தராமல் நடந்துகொண்டனர். மேயர் என்கிற அந்த அகங்காரமும் திமிரும் திமுக என்கிற அதிகார மமதையால் வந்தது; பிறப்பால் முதலமைச்சரான மு.க.ஸ்டாலினும், இளவரசர் உதயநிதி ஸ்டாலினும் கொடுத்த வழிகாட்டுதல்தான் இந்தத் திமிர்” என்று மிகக் காட்டமாக விமர்சித்தார்.
எம்எல்ஏக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை:
“மக்களுக்குத் துரோகம் செய்யும் திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள்”திமுக தற்போது ஆட்சியை இழந்துவிட்டாலும், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள திமுக மேயர்களும், நகராட்சித் தலைவர்களும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். புதிய அரசுக்குக் கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காகவே குப்பை எடுக்க விடுவதில்லை, குடிநீர் விநியோகம் செய்வதில்லை மற்றும் வேணுமென்றே மின்சாரத்தைத் துண்டிப்பது போன்ற மக்கள் துரோகச் செயல்களில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உதயநிதிக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால்:
எங்கள் கட்சியின் சகோதரி பல்லவி எப்போது அவமானப்படுத்தப்பட்டாரோ, அந்த நொடியே நாங்கள் எங்களது தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டோம் என்று முழங்கிய ஆதவ் அர்ஜுனா, உதயநிதி ஸ்டாலினுக்கு விரலை நீட்டி ஒரு திறந்த சவாலை முன்வைத்தார்: “இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. பாரம்பரியமிக்க திமுக என்றும், பெரிய ஆள் என்றும் மார்தட்டிக் கொள்ளும் உதயநிதி அவர்களே.. உங்களது நெற்றிக்கு நேராகச் சவால் விடுகிறேன், தைரியமும் தில்லும் இருந்தால் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டின் மாநகராட்சி மேயர் பதவிகளில் ஒரே ஒரு மேயர் பதவியையாவது ஜெயித்துக் காட்டுங்கள்.
இதையும் படிக்க: “ரஜினிகாந்த் அழைப்பை மறுத்து மன்னிப்பு கேட்டேன்”.. ரகசியம் உடைத்த அண்ணாமலை!!
ஒரே ஒரு மேயர் ஜெயித்துக்காட்டுங்கள்:
இதே சென்னையில் நீங்கள் டெபாசிட் வாங்குறீர்களா இல்லையா என்று பார்ப்போம்! ஒரே ஒரு மேயரை ஜெயித்துக் காட்டினால் நீங்கள் அசைக்க முடியாத சக்தி என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்”. சாதாரண சாமானிய தொண்டர்களைக் கொண்ட தவெக இயக்கம், இந்த அகங்காரத் திமிரை உடைக்க ஆர்கே நகர் மக்களிடமிருந்து தங்களது தேர்தல் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டதாகக் கூறி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.